திருமங்கலக்குடி - திருக்குறுந்தொகை
ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்
5.73 திருமங்கலக்குடி - திருக்குறுந்தொகை
திருநாவுக்கரசர்
தங்க லப்பிய தக்கன் பெருவேள்வி அங்க லக்கழித் தாரருள் செய்தவன் கொங்க லர்க்குழற் கொம்பனை யாளொடு மங்க லக்குடி மேய மணாளனே.
காவி ரியின்வ டகரைக் காண்டகு மாவி ரியும்பொ ழில்மங் கலக்குடித் தேவ ரியும்பி ரமனுந் தேடொணாத் தூவெ ரிச்சுடர்ச் சோதியுட் சோதியே.
மங்க லக்குடி ஈசனை மாகாளி வெங்க திர்ச்செல்வன் விண்ணொடு மண்ணுநேர் சங்கு சக்கர தாரி சதுர்முகன் அங்க கத்திய னும்மர்ச்சித் தாரன்றே.
மஞ்சன் வார்கடல் சூழ்மங்க லக்குடி நஞ்ச மாரமு தாக நயந்துகொண் டஞ்சு மாட லமர்ந்தடி யேனுடை நெஞ்ச மாலய மாக்கொண்டு நின்றதே.
செல்வ மல்கு திருமங் கலக்குடிச் செல்வ மல்கு சிவநிய மத்தராய்ச் செல்வ மல்கு செழுமறை யோர்தொழச் செல்வன் றேவியொ டுந்திகழ் கோயிலே.
மன்னு சீர்மங் கலக்குடி மன்னிய பின்னு வார்சடைப் பிஞ்ஞகன் றன்பெயர் உன்னு வாரு முரைக்கவல் லார்களுந் துன்னு வார்நன் னெறிதொடர் வெய்தவே.
மாத ரார்மரு வும்மங்க லக்குடி ஆதி நாயகன் அண்டர்கள் நாயகன் வேத நாயகன் வேதியர் நாயகன் பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே.
வண்டு சேர்பொழில் சூழ்மங்க லக்குடி விண்ட தாதையைத் தாளற வீசிய சண்ட நாயக னுக்கருள் செய்தவன் துண்ட மாமதி சூடிய சோதியே.
கூசு வாரலர் குண்டர் குணமிலர் நேச மேது மிலாதவர் நீசர்கள் மாசர் பால்மங்க லக்குடி மேவிய ஈசன் வேறு படுக்கவுய்ந் தேனன்றே.
மங்க லக்குடி யான்கயி லைமலை அங்க லைத்தெடுக் குற்ற அரக்கர்கோன் தன்க ரத்தொடு தாள்தலை தோள்தகர்ந் தங்க லைத்தழு துய்ந்தனன் தானன்றே.
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - பிராணேசவரதர், தேவியார் - மங்களநாயகியம்மை.