Skip to content
Thevaram

இரண்டாம் திருமுறை – திருக்கடைக்காப்பு

2.20 திருஅழுந்தூர் (208-218)

திருஞானசம்பந்தர்

2.20

திருஅழுந்தூர் (208-218) பண் - இந்தளம்

208

தொழுமா றுவல்லார் துயர்தீ ரநினைந் தெழுமா றுவல்லார் இசைபா டவிம்மி அழுமா றுவல்லார் அழுந்தை மறையோர் வழிபா டுசெய்மா மடம்மன் னினையே.

209

கடலே றியநஞ் சமுதுண் டவனே உடலே உயிரே உணர்வே யெழிலே அடலே றுடையாய் அழுந்தை மறையோர் விடலே தொழமா மடம்மே வினையே.

210

கழிகா டலனே கனலா டலினாய் பழிபா டிலனே யவையே பயிலும் அழிபா டிலராய் அழுந்தை மறையோர் வழிபா டுசெய்மா மடம்மன் னினையே.

211

வானே மலையே யெனமன் னுயிரே தானே தொழுவார் தொழுதாள் மணியே ஆனே சிவனே அழுந்தை யவரெம் மானே யெனமா மடம்மன் னினையே.

212

அலையார் புனல்சூழ் அழுந்தைப் பெருமான் நிலையார் மறியும் நிறைவெண் மழுவும் இலையார் படையும் மிவையேந் துசெல்வ நிலையா வதுகொள் கெனநீ நினையே.

213

நறவார் தலையின் நயவா வுலகிற் பிறவா தவனே பிணியில் லவனே அறையார் கழலாய் அழுந்தை மறையோர் மறவா தெழமா மடம்மன் னினையே.

214

தடுமா றுவல்லாய் தலைவா மதியம் சுடுமா றுவல்லாய் சுடரார் சடையில் அடுமா றுவல்லாய் அழுந்தை மறையோர் நெடுமா நகர்கை தொழநின் றனையே.

215

பெரியாய் சிறியாய் பிறையாய் மிடறுங் கரியாய் கரிகா டுயர்வீ டுடையாய் அரியாய் எளியாய் அழுந்தை மறையோர் வெரியார் தொழமா மடம்மே வினையே.

216

மணீநீள் முடியான் மலையை அரக்கன் தணியா தெடுத்தான் உடலந் நெரித்த அணியார் விரலாய் அழுந்தை மறையோர் மணிமா மடம்மன் னியிருந் தனையே.

217

முடியார் சடையாய் முனநா ளிருவர் நெடியான் மலரான் நிகழ்வா லிவர்கள் அடிமே லறியார் அழுந்தை மறையோர் படியாற் றொழமா மடம்பற் றினையே.

218

அருஞா னம்வல்லார் அழுந்தை மறையோர் பெருஞா னமுடைப் பெருமா னவனைத் திருஞா னசம்பந் தனசெந் தமிழ்கள் உருஞா னமுண்டாம் உணர்ந்தார் தமக்கே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - வேதபுரீசுவரர், தேவியார் - சவுந்தராம்பிகையம்மை.