திருக்கோடிக்குழகர் பண் - கொல்லி
ஏழாம் திருமுறை – திருப்பாட்டு
7.32 திருக்கோடிக்குழகர் பண் - கொல்லி
சுந்தரமூர்த்தி நாயனார்
கடிதாய்க் கடற்காற்று வந்தெற்றக் கரைமேற் குடிதான் அயலேஇருந் தாற்குற்ற மாமோ கொடியேன் கண்கள்கண் டனகோடிக் குழகீர் அடிகேள் உமக்கார் துணையாக இருந்தீரே.
முன்றான் கடல்நஞ்ச முண்ட அதனாலோ பின்றான் பரவைக் குபகாரஞ் செய்தாயோ குன்றாப் பொழில்சூழ் தருகோடிக் குழகா என்றான் தனியே இருந்தாய் எம்பிரானே.
மத்தம் மலிசூழ் மறைக்கா டதன்றென்பால் பத்தர் பலர்பாட இருந்த பரமா கொத்தார் பொழில்சூழ் தருகோடிக் குழகா எத்தாற் றனியே இருந்தாய் எம்பிரானே.
காடேல் மிகவா லிதுகா ரிகையஞ்சக் கூடிப் பொந்தில் ஆந்தைகள் கூகைகுழற வேடித்தொண்டர் சாலவுந் தீயர் சழக்கர் கோடிக் குழகா இடங்கோயில் கொண்டாயே.
மையார் தடங்கண்ணி பங்காகங் கையாளும் மெய்யாகத் திருந்தனள் வேறிடம் இல்லை கையார் வளைக்காடு காளோடும் உடனாய்க் கொய்யார் பொழிற்கோடி யேகோயில் கொண்டாயே.
அரவேர் அல்குலாளை ஓர்பாக மமர்ந்து மரவங் கமழ்மா மறைக்கா டதன்றென்பாற் குரவப் பொழில்சூழ் தருகோடிக் குழகா இரவே துணையாய் இருந்தாய் எம்பிரானே.
பறையுங் குழலும் ஒலிபாட லியம்ப அறையுங் கழலார்க்க நின்றாடும் அமுதே குறையாப் பொழில்சூழ் தருகோடிக் குழகா இறைவா தனியே இருந்தாய் எம்பிரானே.
ஒற்றியூ ரென்றஊ னத்தினா லதுதானோ அற்றப் படஆ ரூரதென் றகன்றாயோ முற்றா மதிசூடிய கோடிக் குழகா எற்றாற் றனியே இருந்தாய் எம்பிரானே.
நெடியானொடு நான்முக னும்மறி வொண்ணாப் படியான் பலிகொள்ளும் இடங்குடி இல்லை கொடியார்பலர் வேடர்கள் வாழுங் கரைமேல் அடிகேள் அன்பதா யிடங்கோயில் கொண்டாயே.
பாரூர் மலிசூழ் மறைக்கா டதன்றென்பால் ஏரார் பொழில்சூழ் தருகோடிக் குழகை ஆரூரன் உரைத்தன பத்திவை வல்லார் சீரார் சிவலோகத் திருப்பவர் தாமே.
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - அமுதகடநாதர், தேவியார் - மையார்தடங்கணம்மை.