திருக்குடமூக்கு - திருக்குறுந்தொகை
ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்
5.22 திருக்குடமூக்கு - திருக்குறுந்தொகை
திருநாவுக்கரசர்
பூவ ணத்தவன் புண்ணியன் நண்ணியங் காவ ணத்துடை யானடி யார்களை தீவ ணத்திரு நீறுமெய் பூசியோர் கோவ ணத்துடை யான்குட மூக்கிலே.
பூத்தா டிக்கழி யாதேநீர் பூமியீர் தீத்தா டித்திறஞ் சிந்தையுள் வைம்மினோ வேர்த்தா டுங்காளி தன்விசை தீர்கென்று கூத்தா டியுறை யுங்குட மூக்கிலே.
நங்கை யாளுமை யாளுறை நாதனார் அங்கை யாளொ டறுபதந் தாழ்சடைக் கங்கை யாளவள் கன்னி யெனப்படுங் கொங்கை யாளுறை யுங்குட மூக்கிலே.
ஓதா நாவன் திறத்தை யுரைத்திரேல் ஏதா னுமினி தாகும் மியமுனைச் சேதா ஏறுடை யானமர்ந் தவிடங் கோதா விரியுறை யுங்குட மூக்கிலே.
நக்க ரையனை நாடொறும் நன்னெஞ்சே வக்க ரையுறை வானை வணங்குநீ அக்க ரையோ டரவரை யார்த்தவன் கொக்க ரையுடை யான்குட மூக்கிலே.
துறவி நெஞ்சின ராகிய தொண்டர்காள் பிறவி நீங்கப் பிதற்றுமின் பித்தராய் மறவ னாய்ப்பார்த்தன் மேற்கணை தொட்டவெங் குறவ னாருறை யுங்குட மூக்கிலே.
தொண்ட ராகித் தொழுது பணிமினோ பண்டை வல்வினை பற்றற வேண்டுவீர் விண்ட வர்புரம் மூன்றொரு மாத்திரைக் கொண்ட வன்னுறை யுங்குட மூக்கிலே.
காமி யஞ்செய்து காலம் கழியாதே, ஓமி யஞ்செய்தங் குள்ளத் துணர்மினோ சாமி யோடு சரச்சுவ தியவள் கோமி யும்முறை யுங்குட மூக்கிலே.
சிரமஞ் செய்து சிவனுக்குப் பத்தராய்ப் பரம னைப்பல நாளும் பயிற்றுமின் பிரமன் மாலொடு மற்றொழிந் தார்க்கெலாங் குரவ னாருறை யுங்குட மூக்கிலே.
அன்று தானரக் கன்கயி லாயத்தைச் சென்று தானெடுக் கவுமை யஞ்சலும் நன்று தான்நக்கு நல்விர லூன்றிப்பின் கொன்று கீதங்கேட் டான்குட மூக்கிலே.