திருவின்னம்பர் - திருக்குறுந்தொகை
ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்
5.21 திருவின்னம்பர் - திருக்குறுந்தொகை
திருநாவுக்கரசர்
என்னி லாரும் எனக்கினி யாரில்லை என்னி லும்மினி யானொரு வன்னுளன் என்னு ளேஉயிர்ப் பாய்ப்புறம் போந்துபுக் கென்னு ளேநிற்கும் இன்னம்பர் ஈசனே.
மட்டுண் பார்கள் மடந்தையர் வாட்கணால் கட்டுண் பார்கள் கருதுவ தென்கொலோ தட்டி முட்டித்தள் ளாடித் தழுக்குழி எட்டு மூர்த்தியர் இன்னம்பர் ஈசனே.
கனலுங் கண்ணியுந் தண்மதி யோடுடன் புனலுங் கொன்றையுஞ் சூடும் புரிசடை அனலுஞ் சூலமும் மான்மறிக் கையினர் எனலும் என்மனத் தின்னம்பர் ஈசனே.
மழைக்கண் மாமயி லாலும் மகிழ்ச்சியான் அழைக்குந் தன்னடி யார்கள்தம் அன்பினைக் குழைக்குந் தன்னைக் குறிக்கொள வேண்டியே இழைக்கு மென்மனத் தின்னம்பர் ஈசனே.
தென்ன வனென்னை யாளுஞ் சிவனவன் மன்ன வன்மதி யம்மறை யோதியான் முன்ன மன்னவன் சேரலன் பூழியான் இன்னம் இன்புற்ற இன்னம்பர் ஈசனே.
விளக்கும் வேறு படப்பிறர் உள்ளத்தில் அளக்குந் தன்னடி யார்மனத் தன்பினைக் குளக்கும் என்னைக் குறிக்கொள வேண்டியே இளக்கும் என்மனத் தின்னம்பர் ஈசனே.
சடைக்க ணாள்புன லாள்அனல் கையதோர் கடைக்க ணால்மங்கை நோக்கிம வான்மகள் படைக்க ணாற்பரு கப்படு வான்நமக் கிடைக்க ணாய்நின்ற இன்னம்பர் ஈசனே.
தொழுது தூமலர் தூவித் துதித்துநின் றழுது காமுற் றரற்றுகின் றாரையும் பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும் எழுதுங் கீழ்க்கணக் கின்னம்பர் ஈசனே.
விரியுந் தண்ணிள வேனலில் வெண்பிறை புரியுங் காமனை வேவப் புருவமுந் திரியும் எல்லையில் மும்மதில் தீயெழுந் தெரிய நோக்கிய இன்னம்பர் ஈசனே.
சனியும் வெள்ளியுந் திங்களும் ஞாயிறும் முனிவ னாய்முடி பத்துடை யான்றனைக் கனிய வூன்றிய காரண மென்கொலோ இனிய னாய்நின்ற இன்னம்பர் ஈசனே.