திருவொற்றியூர் - திருவிருத்தம்
நான்காம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்
4.86 திருவொற்றியூர் - திருவிருத்தம்
திருநாவுக்கரசர்
செற்றுக் களிற்றுரி கொள்கின்ற ஞான்று செருவெண்கொம்பொன் றிற்றுக் கிடந்தது போலும் இளம்பிறை பாம்பதனைச் சுற்றிக் கிடந்தது கிம்புரி போலச் சுடரிமைக்கும் நெற்றிக்கண் மற்றதன் முத்தொக்குமா லொற்றி யூரனுக்கே.
சொல்லக் கருதிய தொன்றுண்டு கேட்கிற் றொண்டாயடைந்தார் அல்லற் படக்கண்டு பின்னென் கொடுத்தி அலைகொள்முந்நீர் மல்லற் றிரைச்சங்க நித்திலங் கொண்டுவம் பக்கரைக்கே ஒல்லைத் திரைகொணர்ந் தெற்றொற்றி யூருறை யுத்தமனே.
பரவை வருதிரை நீர்க்கங்கை பாய்ந்துக்க பல்சடைமேல் அரவ மணிதரு கொன்றை இளந்திங்கட் சூடியதோர் குரவ நறுமலர் கோங்க மணிந்து குலாய சென்னி உரவு திரைகொணர்ந் தெற்றொற்றி யூருறை யுத்தமனே.
தானகங் காடரங் காக வுடையது தன்னடைந்தார் ஊனக நாறு முடைதலை யிற்பலி கொள்வதுந்தான் தேனக நாறுந் திருவொற்றி யூருறை வாரவர்தாந் தானக மேவந்து போனகம் வேண்டி உழிதர்வரே.
வேலைக் கடல்நஞ்ச முண்டுவெள் ளேற்றொடும் வீற்றிருந்த மாலைச் சடையார்க் குறைவிட மாவது வாரிகுன்றா ஆலைக் கரும்பொடு செந்நெற் கழனி அருகணைந்த சோலைத் திருவொற்றி யூரையெப் போதுந் தொழுமின்களே.
புற்றினில் வாழும் அரவுக்குந் திங்கட்குங் கங்கையென்னுஞ் சிற்றிடை யாட்குஞ் செறிதரு கண்ணிக்குஞ் சேர்விடமாம் பெற்றுடை யான்பெரும் பேச்சுடை யான்பிரி யாதெனையாள் விற்றுடை யானொற்றி யூருடை யான்றன் விரிசடையே.
இன்றரைக் கண்ணுடை யாரெங்கு மில்லை இமய மென்னுங் குன்றரைக் கண்ணன் குலமகட் பாவைக்குக் கூறிட்டநாள் அன்றரைக் கண்ணுங் கொடுத்துமை யாளையும் பாகம்வைத்த ஒன்றரைக் கண்ணன்கண் டீரொற்றி யூருறை உத்தமனே.
சுற்றிவண் டியாழ்செயுஞ் சோலையுங் காவுந் துதைந்திலங்கு பெற்றிகண் டால்மற்று யாவருங் கொள்வர் பிறரிடைநீ ஒற்றிகொண் டாயொற்றி யூரையுங் கைவிட் டுறுமென்றெண்ணி விற்றிகண் டாய்மற் றிதுவொப்ப தில்லிடம் வேதியனே.
சுற்றிக் கிடந்தொற்றி யூரனென் சிந்தை பிரிவறியான் ஒற்றித் திரிதந்து நீயென்ன செய்தி உலகமெல்லாம் பற்றித் திரிதந்து பல்லொடு நாமென்று கண்குழித்துத் தெற்றித் திருப்பதல் லாலென்ன செய்யுமித் தீவினையே.
அங்கட் கடுக்கைக்கு முல்லைப் புறவம் முறுவல்செய்யும் பைங்கட் டலைக்குச் சுடலைக் களரி பருமணிசேர் கங்கைக்கு வேலை அரவுக்குப் புற்று கலைநிரம்பாத் திங்கட்கு வானந் திருவொற்றி யூரர் திருமுடியே.
தருக்கின வாளரக் கன்முடி பத்திறப் பாதந்தன்னால் ஒருக்கின வாறடி யேனைப் பிறப்பறுத் தாளவல்லான் நெருக்கின வானவர் தானவர் கூடிக் கடைந்தநஞ்சைப் பருக்கின வாறென்செய் கேனொற்றி யூருறை பண்டங்கனே.