Skip to content
Thevaram

இரண்டாம் திருமுறை – திருக்கடைக்காப்பு

2.18 திருமருகல் - விடந்தீர்த்ததிருப்பதிகம் (186-196)

திருஞானசம்பந்தர்

2.18

திருமருகல் - விடந்தீர்த்ததிருப்பதிகம் (186-196) பண் - இந்தளம்

186

சடையா யெனுமால் சரண்நீ யெனுமால் விடையா யெனுமால் வெருவா விழுமால் மடையார் குவளை மலரும் மருகல் உடையாய் தகுமோ இவள்உள் மெலிவே.

187

சிந்தா யெனுமால் சிவனே யெனுமால் முந்தா யெனுமால் முதல்வா எனுமால் கொந்தார் குவளை குலவும் மருகல் எந்தாய் தகுமோ இவள்ஏ சறவே.

188

அறையார் கழலும் மழல்வா யரவும் பிறையார் சடையும் முடையாய் பெரிய மறையார் மருகல் மகிழ்வா யிவளை இறையார் வளைகொண் டெழில்வவ் வினையே.

189

ஒலிநீர் சடையிற் கரந்தா யுலகம் பலிநீ திரிவாய் பழியில் புகழாய் மலிநீர் மருகல் மகிழ்வா யிவளை மெலிநீர் மையளாக் கவும்வேண் டினையே.

190

துணிநீ லவண்ணம் முகில்தோன் றியன்ன மணிநீ லகண்ட முடையாய் மருகல் கணிநீ லவண்டார் குழலாள் இவள்தன் அணிநீ லவொண்கண் அயர்வாக் கினையே.

191

பலரும் பரவப் படுவாய் சடைமேல் மலரும் பிறையொன் றுடையாய் மருகல் புலருந் தனையுந் துயிலாள் புடைபோந் தலரும் படுமோ அடியா ளிவளே.

192

வழுவாள் பெருமான் கழல்வாழ் கவெனா எழுவாள் நினைவாள் இரவும் பகலும் மழுவா ளுடையாய் மருகல் பெருமான் தொழுவா ளிவளைத் துயராக் கினையே.

193

இலங்கைக் கிறைவன் விலங்க லெடுப்பத் துலங்கவ் விரலூன் றலுந்தோன் றலனாய் வலங்கொள் மதில்சூழ் மருகற் பெருமான் அலங்கல் லிவளை அலராக் கினையே.

194

எரியார் சடையும் மடியும் மிருவர் தெரியா ததோர்தீத் திரளா யவனே மரியார் பிரியா மருகற் பெருமான் அரியாள் இவளை அயர்வாக் கினையே.

195

அறிவில் சமணும் மலர்சாக் கியரும் நெறியல் லனசெய் தனர்நின் றுழல்வார் மறியேந் துகையாய் மருகற் பெருமான் நெறியார் குழலி நிறைநீக் கினையே.

196

வயஞா னம்வல்லார் மருகற் பெருமான் உயர்ஞா னமுணர்ந் தடியுள் குதலால் இயன்ஞா னசம்பந் தனபா டல்வல்லார் வியன்ஞா லமெல்லாம் விளங்கும் புகழே.