திருவடுகூர் பண் - குறிஞ்சி
முதல் திருமுறை – திருக்கடைக்காப்பு
1.87 திருவடுகூர்
திருஞானசம்பந்தர்
சுடுகூ ரெரிமாலை யணிவர் சுடர்வேலர் கொடுகூர் மழுவாளொன் றுடையார் விடையூர்வர் கடுகூர் பசிகாமங் கவலை பிணியில்லார் வடுகூர் புனல்சூழ்ந்த வடுகூ ரடிகளே.
பாலு நறுநெய்யுந் தயிரும் பயின்றாடி ஏலுஞ் சுடுநீறும் என்பும் ஒளிமல்கக் கோலம் பொழிற்சோலைக் கூடி மடவன்னம் ஆலும் வடுகூரில் ஆடும் மடிகளே.
சூடும் இளந்திங்கள் சுடர்பொற் சடைதன்மேல் ஓடுங் களியானை உரிபோர்த் துமையஞ்ச ஏடு மலர்மோந்தங் கெழிலார் வரிவண்டு பாடும் வடுகூரில் ஆடும் மடிகளே.
துவரும் புரிசையுந் துதைந்த மணிமாடம் கவர வெரியோட்டிக் கடிய மதிலெய்தார் கவரு மணிகொல்லைக் கடிய முலைநல்லார் பவரும் வடுகூரில் ஆடும் மடிகளே.
துணியா ருடையாடை துன்னி யரைதன்மேல் தணியா அழல்நாகந் தரியா வகைவைத்தார் பணியா ரடியார்கள் பலரும் பயின்றேத்த அணியார் வடுகூரில் ஆடும் மடிகளே.
தளருங் கொடியன்னாள் தன்னோ டுடனாகிக் கிளரும் அரவார்த்துக் கிளரும் முடிமேலோர் வளரும் பிறைசூடி வரிவண் டிசைபாட ஒளிரும் வடுகூரில் ஆடும் மடிகளே.
நெடியர் சிறிதாய நிரம்பா மதிசூடும் முடியர் விடையூர்வர் கொடியர் மொழிகொள்ளார் கடிய தொழிற்காலன் மடிய வுதைகொண்ட அடியர் வடுகூரில் ஆடும் மடிகளே.
பிறையும் நெடுநீரும் பிரியா முடியினார் மறையும் பலபாடி மயானத் துறைவாரும் பறையும் அதிர்குழலும் போலப் பலவண்டாங் கறையும் வடுகூரில் ஆடும் மடிகளே.
சந்தம் மலர்வேய்ந்த சடையின் இடைவிம்மு கந்தம் மிகுதிங்கள் சிந்து கதிர்மாலை வந்து நயந்தெம்மை நன்றும் அருள்செய்வார் அந்தண் வடுகூரில் ஆடும் மடிகளே.
திருமா லடிவீழத் திசைநான் முகனாய பெருமா னுணர்கில்லாப் பெருமான் நெடுமுடிசேர் செருமால் விடையூருஞ் செம்மான் திசைவில்லா அருமா வடுகூரில் ஆடும் மடிகளே.
படிநோன் பவையாவர் பழியில் புகழான கடிநாண் நிகழ்சோலை கமழும் வடுகூரைப் படியா னசிந்தை மொழியார் சம்பந்தன் அடிஞா னம்வல்லா ரடிசேர் வார்களே.
இத்தலம் நடுநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - வடுகேசுவரர், தேவியார் - வடுவகிர்க்கண்ணியம்மை.