Skip to content
Thiruvisaippa & Thiruppallandu

திருவாலியமுதனார் அருளிய திருவிசைப்பா

4. கோயில் - கோலமலர்

திருவாலியமுதனார்

4. கோயில் - கோலமலர்

247

கோல மலர்நெடுங்கண் கொவ்வை வாய்க்கொடி ஏரிடையீர் பாலினை இன்னமுதைப் பரமாய பரஞ்சுடரைச் சேலுக ளும்வயல்சூழ் தில்லை நகர்ச் சிற்றம்பலத்(து) ஏலவுடை எம்இறையை என்றுகொல் காண்பதுவே.

248

காண்பதி யான் என்றுகோல் கதிர்மாமணி யைக்கனலை ஆண்பெண் அருவுருவென்(று) அறிதற்கு அரி தாயவனைச் சேண்பணை மாளிகைசூழ் தில்லைமாநகர்ச் சிற்றம்பலம் மாண்புடை மாநடஞ்செய் மறையோர் மலர்ப் பாதங்களே.

249

கள்ளவிழ் தாமரைமேல் கண்டயனொடு மால்பணிய ஒள்ளெரி யின்நடுவே உருவாய்ப்பரந் தோங்கிய சீர்த் தெள்ளிய தண்பொழில்சூழ் தில்லைமாநகர்ச் சிற்றம்பலத் துள்ளெரி யாடுகின்ற ஒருவனை உணர்வரிதே.

250

அரிவையோர் கூறுகந்தான் அழகன் எழில் மால்கரியின் உரிவைநல் உத்தரியம் உகந்தான் உம் பரார்தம்பிரான் புரிபவர்க்(கு) இன்னருள்செய் புலியூர்த்திருச் சிற்றம்பலத்(து) எரிமகிழ்ந் தாடுகின்ற எம்பிரான்என் இறையவனே.

251

இறையவனை என்கதியை என்னுள்ளே உயிர்ப்பாகி நின்ற மறைவனை மண்ணும் விண்ணும் மலிவான் சுடராய் மலிந்த சிறையணி வண்டறையும் தில்லை மாநகர்ச் சிற்றம்பலம் நிறையணி யாம் இறையை நினைத்தேன் இனிப் போக்குவனே.

252

நினைத்தேன் இனிப்போக்குவனோ? நிமலத் திரளை நினைப்பார் மனத்தி னுளேயிருந்த மணியைமணி மாணிக்கத்தைக் கனைத்திழி யுங்கழனிக் கனகங்கதிர் ஒண்பவளம் சினத்தோடு வந்தெறியும் தில்லைமாநகர்க் கூத்தனையே.

253

கூத்தனை வானவர்தம் கொழுந்தைக் கொழுந்தாய் எழுந்த மூத்தனை மூவருவின் முதலைமுத லாகிநின்ற ஆத்தனைத் தான்படுக்கும் அந்தணர் தில்லை அம்பலத்துள் ஏத்தநின் றாடுகின்ற எம்பிரானடி சேர்வன்கொலோ?

254

சேர்வன்கொலோ அன்னையீர் திகழும்மலர்ப் பாதங்களை ஆர்வங்கொளத் தழுவி அணிநீ(று) என் முலைக்கணியச் சீர்வங்கம் வந்தணவும் தில்லைமாநகர்ச் சிற்றம்பலத்(து) ஏர்வங்கை மான்மறியன் எம்பிரான் என்பால் நேசனையே.

255

நேசமு டையவர்கள் நெஞ்சுளே யிடங்கொண் டிருந்த காய்சின மால்லிடையூர் கண்ணுதலைக் காமருசீர்த் தேசமிகு புகழோர் தில்லைமாநகர்ச் சிற்றம்பலத்(து) ஈசனை எவ்வுயிர்க்கும் எம்மிறைவன்என்(று) ஏத்துவனே.

256

இறைவனை ஏத்துகின்ற இளையாள்மொழி இன்றமிழால் மறைவல நாவலர்கள் மகிழ்ந்தேத்து சிற்றம்பலத்தை அறைசெந்நெல் வான்கரும்பின் அணியாலைகள் சூழ்மயிலை மறைவல ஆலிசொல்லை மகிழ்ந்தேத்துக வானெளிதே.