Skip to content
Thiruvisaippa & Thiruppallandu

திருவாலியமுதனார் அருளிய திருவிசைப்பா

2. கோயில் - பவளமால்வரை

திருவாலியமுதனார்

2. கோயில் - பவளமால்வரை

226

பவளமால் வரையைப் பனிபடர்ந்(து) அனையதோர் படரொளிதரு திருநீறும் குவளை மாமலர்க் கண்ணியும் கொன்றையும் துன்றுபொற் குழல்திருச் சடையும் திவள மாளிகை சூழ்தரு தில்லை யுள்திரு நடம்புரி கின்ற தவள வண்ணனை நினைதொறும் என்மனம் தழல்மெழு(கு)ஒக் கின்றதே.

227

ஒக்க ஒட்டந்த அந்தியும் மதியமும் அலைகடல் ஒலியோடு நெக்கு வீழ்தரு நெஞ்சினைப் பாய்தலும் நிறையழிந்(து) இருப்பேனைச் செக்கர் மாளிகை சூழ்தரு தில்லையுள் திருநடம் வகையாலே பக்கம் ஒட்டந்த மன்மதன் மலர்க்கணை படுந்தொறும் அலைந்தேனே.

228

அலந்து போயினேன் அம்பலக் கூத்தனே அணிதில்லை நகராளீ சிலந்தியை அரசாள்க என்(று) அருள்செய்த தேவதே வீசனே உலந்தமார்க் கண்டிக் காகிஅக் காலனை உயிர்செ வுதைகொண்ட மலர்ந்த பாதங்கள் வனமுலை மேலொற்ற வந்தருள் செய்யாயே.

229

அருள்செய்(து) ஆடுநல் அம்பலக் கூத்தனே ! அணிதில்லை நகராளீ மருள்செய்(து) என்றனை வனமுலை பொன்பயப் பிப்பது வழக்கமோ? திரளும் நீள்மணிக் கங்கையைத் திருச்சடைச் சேர்த்திஅச் செய்யாளுக்(கு) உருவம் பாகமும் ஈந்துநல் அந்தியை ஒண்ணுதல் வைத்தோனே.

230

வைத்த பாதங்கள் மாலவன் காண்கிலன் மலரவன் முடிதேடி எய்த்து வந்திழந்(து) இன்னமும் துதிக்கின்றார் எழில்மறை அவற்றாவே செய்த்தலைக் கமலம் மலர்ந்தோங்கிய தில்லை அம்பலத் தானைப் பத்தியாற் சென்று கண்டிட என்மனம் பதைபதைப்(பு) ஒழியாதே.

231

தேய்ந்து மெய்வெளுத்(து) அகம் வளைத்து அரவினை அஞ்சித்தான் இருந்தேயும் காய்ந்து வந்துவந்(து) என்றனை வலிசெய்து கதிர்நிலா எரிதூவும் ஆய்ந்த நான்மறை அந்தணர் தில்லையுள் அம்பலத்(து) அரன்ஆடல் வாய்ந்த மாலர்ப் பாதங்கள் காண்பதோர் மனத்தினை உடையேற்கே.

232

உடையும் பாய்புலித் தோலும்நல் அரவமும் உண்பதும் பலிதேர்ந்து விடைய(து) ஊர்வது மேவிடங் கொடுவரை, ஆகிலும் என்நெஞ்சம் மடைகொள் வாளைகள் குதிகொளும் வயல்தில்லை அம்பலத்து அனலாடும் உடைய கோவினை அன்றிமற்று ஆரையும் உள்ளுவது அறியேனே.

233

அறிவும் மிக்கநல் நாணமும் நிறைமையும் ஆசையும் இங்குள்ள உறவும் பெற்றநற் றாயடு தந்தையும் உடன்பிறந் தவரோடும் பிறிய விட்டுனை அடைந்தனன் என்றுகொள் பெரும்பற்றப் புலியூரின் மறைகள் நான்கும்கொண் டந்தணர் ஏத்தநன் மாநடம் மகிழ்வானே.

234

வான நாடுடை மைந்தனே ! ஓஎன்பன் 'வந்தரு ளாய்' என்பன் பால்நெய் ஐந்துடன் ஆடிய படர்சடைப் பால்வண்ணனேஎன்பன் தேனமர் பொழில் சூழ்தரு தில்லையுள் திருநடம் புரிகின்ற என் வாமணிப் பூணணி மார்பனே ! எனக்கருள் புரியாயே.

235

புரியும் பொன்மதில் சூழ்தரு தில்லையுள் பூகரர் பலர்போற்ற எரிய(து) ஆடும்எம் ஈசனைக் காதலித்(து) இனையவர் மொழியாக வரைசெய் மாமதில் மயிலையர் மன்னவன் மறைவல திருவாலி பரவல் பத்திவை வல்லவர் பரமன(து) அடியினை பணிவாரே.