1. கோயில் - மின்னார் உருவம்
கண்டராதித்தர் அருளிய திருவிசைப்பா
1. கோயில் - மின்னார் உருவம்
கண்டராதித்தர்
மின்னார் உருவம் மேல்விளங்க வெண்கொடி மாளி கைசூழப் பொன்னார் குன்றம் ஒன்று வந்து நின்றது போலும் என்னாத் தென்னா என்று வண்டு பாடும் தென்தில்லை அம்ப லத்துள் என்னார் அமுதை எங்கள் கோவை என்றுகொல் எய்துவதே?
ஓவா முத்தீ அஞ்சு வேள்வி ஆறங்க நான்மறையோர் ஆவே படுப்பார் அந்த ணாளர் ஆகுதி வேட்டுயர் வார் மூவா யிரவர் தங்க ளோடு முன் அரங்(கு) ஏறிநின்ற கோவே உன்றன் கூத்துக் காணக் கூடுவ தென்று கொலோ.
முத்தீ யாளர் நான் மறையர் மூவா யிர வர்நின்னோ(டு) ஒத்தே வாழும் தன்மை யாளர் ஓதிய நான்மறையைத் தெத்தே யென்று வண்டு பாடும் தென்தில்லை அம்பலத்துள் அத்தா உன்றன் ஆடல் காண அணைவதும் என்றுகொலோ?
மானைப் புரையும் மடமென் நோக்கி மாமலை யாளோடும் ஆனைஞ் சாடும் சென்னி மேலோர் அம்புலி சூடும்அரன் தேனைப் பாலைத் தில்லை மல்கு செம்பொனின் அம்பலத்துக் கோனை ஞானக் கொழுந்து தன்னைக் கூடுவது என்றுகொலோ?
களிவான் உலகில் கங்கை நங்கை காதலனே ! அருளென்(று) ஒளிமால் முன்னே வரங்கி டக்க உன்னடியார்க்(கு) அருளும் தெளிவார் அமுதே ! தில்லை மல்கு செம்பொனின் அம்பலத்துள் ஒளிவான் சுடரே ! உன்னை நாயேன் உறுவதும் என்றுகொலோ?
பாரோர் முழுதும் வந்தி றைஞ்சப் பதஞ்சலிக்(கு) ஆட்டுகந்தான் வாரார் முலையாள் மங்கை பங்கன் மாமறையோர் வணங்கச் சீரான் மல்கு தில்லைச் செம்பொன் அம்பலத்(து) ஆடுகின்ற காரார் மிடற்றெங் கண்டனாரைக் காண்பதும் என்றுகொலோ?
இலையார் கதிர்வேல் இலங்கைவேந்தன் இருபது தோளும்இற மலைதான் எடுத்த மற்ற வற்கு வாளடு நாள்கொடுத்தான் சிலையால் புரமூன்(று) எய்த வில்வி செம்பொனின் அம்பலத்துக் கலையார் மறிபொன் கையி னானைக் காண்பதும் என்றுகொலோ?
வெங்கோல் வேந்தன் தென்னன் நாடும் ஈழமும் கொண்டதிறல் செங்கோற் சோழன் கோழி வேந்தன் செம்பியன் பொன்னணிந்த அங்கோல் வளையார் பாடி யாடும் அணிதில்லை அம்பலத்துள் எங்கோன் ஈசன் எம்மி றையை என்றுகொல் எய்துவதே.
நெடுயா னோடு நான் முகனும் வானவரும் நெருங்கி முடியான் முடிகள் மோதி உக்க முழுமணி யின்திரளை அடியார் அலகி னால்தி ரட்டும் அணிதில்லை அம்பலத்துக் கடியார் கொன்றை மாலை யானைக் காண்பதும் என்றுகொலோ?
சீரான் மல்கு தில்லைச் செம்பொன் அம்பலத் தாழிதன்னைக் காரார் சோலைக் கோழி வேந்தன் தஞ்சையர் கோன்கலந்த ஆரா இன்சொற் கண்டரா தித்தன் அருந்தமிழ் மாலை வல்லார் பேரா வுலகிற் பெருமை யோடும் பேரின்பம் எய்துவரே.