திருநீடூர் பண் - தக்கேசி
ஏழாம் திருமுறை – திருப்பாட்டு
7.56 திருநீடூர் பண் - தக்கேசி
சுந்தரமூர்த்தி நாயனார்
ஊர்வ தோர்விடை ஒன்றுடை யானை ஒண்ணு தல்தனிக் கண்ணுத லானைக் கார தார்கறை மாமிடற் றானைக் கருத லார்புரம் மூன்றெரித் தானை நீரில் வாளை வரால்குதி கொள்ளும் நிறைபு னற்கழ னிச்செல்வ நீடூர்ப் பாரு ளார்பர வித்தொழ நின்ற பரம னைப்பணி யாவிட லாமே.
துன்னு வார்சடைத் தூமதி யானைத் துயக்கு றாவகை தோன்றுவிப் பானைப் பன்னு நான்மறை பாடவல் லானைப் பார்த்த னுக்கருள் செய்தபி ரானை என்னை இன்னருள் எய்துவிப் பானை ஏதி லார்தமக் கேதிலன் றன்னைப் புன்னை மாதவி போதலர் நீடூர்ப் புனித னைப்பணி யாவிட லாமே.
கொல்லும் மூவிலை வேலுடை யானைக் கொடிய காலனை யுங்குமைத் தானை நல்ல வாநெறி காட்டுவிப் பானை நாளும் நாம்உகக் கின்ற பிரானை அல்ல லில்லரு ளேபுரி வானை ஆடு நீர்வயல் சூழ்புனல் நீடூர்க் கொல்லை வெள்ளெரு தேறவல் லானைக் கூறி நாம்பணி யாவிட லாமே.
தோடு காதிடு தூநெறி யானைத் தோற்ற முந்துறப் பாயவன் றன்னைப் பாடு மாமறை பாடவல் லானைப் பைம்பொ ழிற்குயில் கூவிட மாடே ஆடு மாமயில் அன்னமோ டாட அலைபு னற்கழ னித்திரு நீடூர் வேட னாயபி ரானவன் றன்னை விரும்பி நாம்பணி யாவிட லாமே.
குற்ற மொன்றடி யாரிலர் ஆனாற் கூடு மாறத னைக்கொடுப் பானைக் கற்ற கல்வியி லும்மினி யானைக் காணப் பேணும வர்க்கெளி யானை முற்ற அஞ்சுந் துறந்திருப் பானை மூவ ரின்முத லாயவன் றன்னைச் சுற்று நீள்வயல் சூழ்திரு நீடூர்த் தோன்ற லைப்பணி யாவிட லாமே.
காடில் ஆடிய கண்ணுத லானைக் கால னைக்கடிந் திட்டபி ரானைப் பாடி ஆடும்பரி சேபுரிந் தானைப் பற்றி னோடுசுற் றம்மொழிப் பானைத் தேடி மாலயன் காண்பரி யானைச் சித்த முந்தெளி வார்க்கெளி யானைக் கோடி தேவர்கள் கும்பிடு நீடூர்க் கூத்த னைப்பணி யாவிட லாமே.
விட்டி லங்கெரி யார்கையி னானை வீடி லாதவி யன்புக ழானைக் கட்டு வாங்கந் தரித்தபி ரானைக் காதி லார்கன கக்குழை யானை விட்டி லங்குபுரி நூலுடை யானை வீந்த வர்தலை யோடுகை யானைக் கட்டி யின்கரும் போங்கிய நீடூர்க் கண்டு நாம்பணி யாவிட லாமே.
மாய மாய மனங்கெடுப் பானை மனத்து ளேமதி யாய்இருப் பானைக் காய மாயமும் ஆக்குவிப் பானைக் காற்று மாய்க்கன லாய்க்கழிப் பானை ஓயு மாறுரு நோய்புணர்ப் பானை ஒல்லை வல்வினை கள்கெடுப் பானை வேய்கொள் தோள்உமைப் பாகனை நீடூர் வேந்த னைப்பணி யாவிட லாமே.
கண்ட முங்கறுத் திட்டபி ரானைக் காணப் பேணும வர்க்கெளி யானைத் தொண்ட ரைப்பெரி தும்முகப் பானைத் துன்ப முந்துறந் தின்பினி யானைப் பண்டை வல்வினை கள்கெடுப் பானைப் பாக மாமதி யாயவன் றன்னைக் கெண்டை வாளை கிளர்புனல் நீடூர்க் கேண்மை யாற்பணி யாவிட லாமே.
அல்லல் உள்ளன தீர்த்திடு வானை அடைந்த வர்க்கமு தாயிடு வானைக் கொல்லை வல்லர வம்மசைத் தானைக் கோல மார்கரி யின்னுரி யானை நல்ல வர்க்கணி யானவன் றன்னை நானுங் காதல்செய் கின்றபி ரானை எல்லி மல்லிகை யேகமழ் நீடூர் ஏத்தி நாம்பணி யாவிட லாமே.
பேரோர் ஆயிர மும்முடை யானைப் பேரி னாற்பெரி தும்மினி யானை நீரூர் வார்சடை நின்மலன் றன்னை நீடூர் நின்றுகந் திட்டபி ரானை ஆரூ ரன்னடி காண்பதற் கன்பாய் ஆத ரித்தழைத் திட்டவிம் மாலை பாரூ ரும்பர வித்தொழ வல்லார் பத்த ராய்முத்தி தாம்பெறு வாரே.
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - சோமநாதேசுவரர், தேவியார் - வேயுறுதோளியம்மை.