திருமுருகன்பூண்டி பண் - பழம்பஞ்சுரம்
ஏழாம் திருமுறை – திருப்பாட்டு
7.49 திருமுருகன்பூண்டி பண் - பழம்பஞ்சுரம்
சுந்தரமூர்த்தி நாயனார்
கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர் விரவ லாமை சொல்லித் திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொண் டாற லைக்கு மிடம் முடுகு நாறிய வடுகர் வாழ்முருகன் பூண்டி மாநகர் வாய் இடுகு நுண்ணிடை மங்கை தன்னொடும் எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.
வில்லைக் காட்டி வெருட்டி வேடுவர் விரவ லாமை சொல்லிக் கல்லி னாலெறிந் திட்டும் மோதியுங் கூறை கொள்ளு மிடம் முல்லைத் தாது மணங்கமழ் முருகன் பூண்டி மாநகர் வாய் எல்லைக் காப்பதொன் றில்லை யாகில்நீர் எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.
பசுக்க ளேகொன்று தின்று பாவிகள் பாவ மொன் றறியார் *உசிர்க்கொ லைபல நேர்ந்து நாடொறுங் கூறை கொள்ளு மிடம் முசுக்கள் போற்பல வேடர்வாழ் முருகன் பூண்டி மாநகர் வாய் இசுக்க ழியப் பயிக்கங் கொண்டுநீர் எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. *உயிர் - உசிர் என மருவியது.
பீறற் கூறை உடுத்தோர் பத்திரங் கட்டி வெட்டன ராய்ச் சூறைப் பங்கிய ராகி நாடொறுங் கூறை கொள்ளு மிடம் மோறை வேடுவர் கூடிவாழ் முருகன் பூண்டி மாநகர் வாய் ஏறு காலிற்ற தில்லை யாய்விடில் எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.
தயங்கு தோலை உடுத்த சங்கரா சாம வேத மோதி மயங்கி ஊரிடு பிச்சை கொண்டுணும் மார்க்க மொன்றறி யீர் முயங்கு பூண்முலை மங்கையாளொடு முருகன் பூண்டி மாநகர் வாய் இயங்க வும்மிடுக் குடைய ராய்விடில் எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.
விட்டி சைப்பன கொக்க ரைகொடு கொட்டி தத்த ளகங் கொட்டிப் பாடுமித் துந்து மியொடு குடமுழா நீர் மகிழ்வீர் மொட்ட லர்ந்து மணங்கமழ் முருகன் பூண்டி மாநகர் வாய் இட்ட பிச்சைகொண் டுண்ப தாகில்நீர் எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.
வேதம் ஓதிவெண் ணீறு பூசிவெண் கோவணந் தற்ற யலே ஓதம் மேவிய ஒற்றி யூரையும் முத்தி நீர் மகிழ்வீர் மோதி வேடுவர் கூறைகொள்ளும் முருகன் பூண்டி மாநகர் வாய் ஏது காரணம் எது காவல்கொண் டெத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.
படவ ரவுநுண் ணேரி டைப்பணைத் தோள்வ ரிநெடுங் கண் மடவ ரல்லுமை நங்கை தன்னையோர் பாகம் வைத்து கந்தீர் முடவ ரல்லீர் இடரிலீர் முருகன் பூண்டி மாநகர் வாய் இடவ மேறியும் போவ தாகில்நீர் எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.
சாந்த மாகவெண் ணீறு பூசிவெண் பற்ற லைக லனா வேய்ந்த வெண்பிறைக் கண்ணி தன்னையோர் பாகம் வைத்து கந்தீர் மோந்தை யோடு முழக்கறா முருகன் பூண்டி மாநகர் வாய் ஏந்து பூண்முலை மங்கை தன்னொடும் எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.
முந்தி வானவர் தாந்தொழு முருகன் பூண்டி மாநகர் வாய்ப் பந்த ணைவிரற் பாவை தன்னையோர் பாகம் வைத்த வனைச் சிந்தை யிற்சிவ தொண்ட னூரன் உரைத்தன பத்துங் கொண் டெந்தம் மடிகளை ஏத்து வாரிடர் ஒன்றுந் தாமி லரே.
கழறிற்றறிவாரென்னுஞ் சேரமான்பெருமானாயனார் கொடுத்த திரவியங்களை பரிசனங்கள் தலையில் எடுப்பித்துக்கொண்டு திருமுருகன்பூண்டிக்குச் சமீபத்தில் எழுந்தருளும்போது பரமசிவத்தின் கட்டளையினால் பூதங்கள் வேடுவர்களாகிவந்து அந்தப்பரிசனங்களை அடித்துப் பொருள்களைப் பறித்துப் போயின. அப்போது சுந்தரமூர்த்தி சுவாமிகள் இந்தப் பதிகமோதிப் பொருள்களைப் பெற்றுக்கொண்டது. இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - ஆவுடைநாயகர், தேவியார் - ஆவுடைநாயகியம்மை.