Skip to content
Thevaram

ஏழாம் திருமுறை – திருப்பாட்டு

7.24 திருமழபாடி பண் - நட்டராகம்

சுந்தரமூர்த்தி நாயனார்

7.24

திருமழபாடி பண் - நட்டராகம்

239

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே.

240

கீளார் கோவணமுந் திருநீறுமெய் பூசியுன்றன் தாளே வந்தடைந்தேன் தலைவாயெனை ஏன்றுகொள்நீ வாளார் கண்ணிபங்கா மழபாடியுள் மாணிக்கமே கேளா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.

241

எம்மான் எம்மனையென் றெனக்கெட்டனைச் சார்வாகார் இம்மா யப்பிறவி பிறந்தேயிறந் தெய்த்தொழிந்தேன் மைம்மாம் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே அம்மான் நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.

242

பண்டே நின்னடியேன் அடியாரடி யார்கட்கெல்லாந் தொண்டே பூண்டொழிந்தேன் தொடராமைத் துரிசறுத்தேன் வண்டார் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே அண்டா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.

243

கண்ணாய் ஏழுலகுங் கருத்தாய அருத்தமுமாய்ப் பண்ணார் இன்றமிழாய்ப் பரமாய பரஞ்சுடரே மண்ணார் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே அண்ணா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.

244

நாளார் வந்தணுகி நலியாமுனம் நின்றனக்கே ஆளா வந்தடைந்தேன் அடியேனையும் ஏன்றுகொள்நீ மாளா நாளருளும் மழபாடியுள் மாணிக்கமே ஆளா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.

245

சந்தா ருங்குழையாய் சடைமேற்பிறை தாங்கிநல்ல வெந்தார் வெண்பொடியாய் விடையேறிய வித்தகனே மைந்தார் சோலைகள்சூழ் மழபாடியுள் மாணிக்கமே எந்தாய் நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.

246

வெய்ய விரிசுடரோன் மிகுதேவர் கணங்களெல்லாஞ் செய்ய மலர்களிட மிகுசெம்மையுள் நின்றவனே மையார் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே ஐயா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.

247

நெறியே நின்மலனே நெடுமாலயன் போற்றிசெய்யுங் குறியே நீர்மையனே கொடியேரிடை யாள்தலைவா மறிசேர் அங்கையனே மழபாடியுள் மாணிக்கமே அறிவே நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.

248

ஏரார் முப்புரமும் எரியச்சிலை தொட்டவனை வாரார் கொங்கையுடன் மழபாடியுள் மேயவனைச் சீரார் நாவலர்கோன் ஆரூரன் உரைத்ததமிழ் பாரோர் ஏத்தவல்லார் பரலோகத் திருப்பாரே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - வச்சிரத்தம்பநாதர், தேவியார் - அழகம்மை.