Skip to content
Thevaram

ஏழாம் திருமுறை – திருப்பாட்டு

7.18 திருவேள்விக்குடி பண் - நட்டராகம்

சுந்தரமூர்த்தி நாயனார்

7.18

திருவேள்விக்குடி பண் - நட்டராகம்

178

மூப்பதும் இல்லை பிறப்பதும் இல்லை இறப்பதில்லை சேர்ப்பது காட்டகத் தூரினு மாகச்சிந் திக்கினல்லாற் காப்பது வேள்விக் குடிதண் டுருத்தியெங் கோன்அரைமேல் ஆர்ப்பது நாகம் அறிந்தோமேல் நாமிவர்க் காட்படோ மே.

179

கட்டக்காட் டில்நட மாடுவரி யாவர்க்குங் காட்சியொண்ணார் சுட்டவெண் ணீறணிந் தாடுவர் பாடுவர் தூயநெய்யால் வட்டக்குண் டத்தில் எரிவளர்த் தோம்பி மறைபயில்வார் அட்டக்கொண் டுண்ப தறிந்தோமேல் நாமிவர்க் காட்படோ மே.

180

பேருமோர் ஆயிரம் பேருடை யார்பெண்ணோ டாணுமல்லர் ஊரும தொற்றியூர் மற்றையூர் பெற்றவா நாமறியோம் காருங் கருங்கடல் நஞ்சமு துண்டுகண் டங்கறுத்தார்க் காரம்பாம் பாவ தறிந்தோமேல் நாமிவர்க் காட்படோ மே.

181

ஏனக்கொம் பும்மிள ஆமையும் பூண்டங்கோர் ஏறுமேறிக் கானக்காட் டிற்றொண்டர் கண்டன சொல்லியுங் காமுறவே மானைத்தோல் ஒன்றை உடுத்துப் புலித்தோல் பியற்குமிட்டு யானைத்தோல் போர்ப்ப தறிந்தோமேல் நாமிவர்க் காட்படோ மே.

182

ஊட்டிக்கொண் டுண்பதோர் ஊணிலர் ஊரிடு பிச்சையல்லாற் பூட்டிக்கொண் டேற்றினை ஏறுவர் ஏறியோர் பூதந்தம்பாற் பாட்டிக்கொண் டுண்பவர் பாழிதொ றும்பல பாம்புபற்றி ஆட்டிக்கொண் டுண்ப தறிந்தோமேல் நாமிவர்க் காட்படோ மே.

183

குறவனார் தம்மகள் தம்மக னார்மண வாட்டிகொல்லை மறவனா ராயங்கோர் பன்றிப்பின் போவது மாயங்கண்டீர் இறைவனார் ஆதியார் சோதிய ராயங்கோர் சோர்வுபடா அறவனார் ஆவத றிந்தோமேல் நாமிவர்க் காட்படோ மே.

184

பித்தரை ஒத்தொரு பெற்றியர் நற்றவை என்னைப்பெற்ற முத்தவை தம்மனை தந்தைக்குந் தவ்வைக்குந் தம்பிரானார் செத்தவர் தந்தலை யிற்பலி கொள்வதே செல்வமாகில் அத்தவம் ஆவத றிந்தோமேல் நாமிவர்க் காட்படோ மே.

185

உம்பரான் ஊழியான் ஆழியான் ஓங்கி மலருறைவான் தம்பரம் அல்லவர் சிந்திப்ப வர்தடு மாற்றறுப்பார் எம்பரம் அல்லவர் என்னெஞ்சத் துள்ளும் இருப்பதாகில் அம்பரம் ஆவத றிந்தோமேல் நாமிவர்க் காட்படோ மே.

186

இந்திர னுக்கும் இராவண னுக்கும் அருள்புரிந்தார் மந்திரம் ஓதுவர் மாமறை பாடுவர் மான்மறியர் சிந்துரக் கண்ணனும் நான்முக னும்முட னாய்த்தனியே அந்தரஞ் செல்வத றிந்தோமேல் நாமிவர்க் காட்படோ மே.

187

கூடலர் மன்னன் குலநாவ லூர்க்கோன் நலத்தமிழைப் பாடவல் லபர மன்னடி யார்க்கடி மைவழுவார் நாடவல் லதொண்டன் ஆரூரன் ஆட்படு மாறுசொல்லிப் பாடவல் லார்பர லோகத் திருப்பது பண்டமன்றே.