திருப்பழையாறைவடதளி - திருக்குறுந்தொகை
ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்
5.58 திருப்பழையாறைவடதளி - திருக்குறுந்தொகை
திருநாவுக்கரசர்
தலையெ லாம்பறிக் குஞ்சமண் கையருள் நிலையி னான்மறைத் தான்மறைக் கொண்ணுமே அலையி னார்பொழி லாறை வடதளி நிலையி னானடி யேநினைந் துய்ம்மினே.
மூக்கி னால்முரன் றோதியக் குண்டிகை தூக்கி னார்குலந் தூரறுத் தேதனக் காக்கி னானணி யாறை வடதளி நோக்கி னார்க்கில்லை யாலரு நோய்களே.
குண்ட ரைக்குண மில்லரைக் கூறையில் மிண்ட ரைத்துரந் தவிம லன்றனை அண்ட ரைப்பழை யாறை வடதளிக் கண்ட ரைத்தொழு துய்ந்தன கைகளே.
முடைய ரைத்தலை முண்டிக்கும் மொட்டரை கடைய ரைக்கடிந் தார்கனல் வெண்மழுப் படைய ரைப்பழை யாறை வடதளி உடைய ரைக்குளிர்ந் துள்குமென் உள்ளமே.
ஒள்ள ரிக்கணார் முன்னமண் நின்றுணுங் கள்ள ரைக்கடிந் தகருப் பூறலை அள்ள லம்புன லாறை வடதளி வள்ள லைப்புக ழத்துயர் வாடுமே.
நீதி யைக்கெட நின்றம ணேயுணுஞ் சாதி யைக்கெடு மாசெய்த சங்கரன் ஆதி யைப்பழை யாறை வடதளிச் சோதி யைத்தொழு வார்துயர் தீருமே.
திரட்டி ரைக்க வளந்திணிக் குஞ்சமண் பிரட்ட ரைப்பிரித் தபெரு மான்றனை அருட்டி றத்தணி யாறை வடதளித் தெருட்ட ரைத்தொழத் தீவினை தீருமே.
ஓதி னத்தெழுத் தஞ்சுண ராச்சமண் *வேதி னைப்படுத் தானைவெங் கூற்றுதை பாத னைப்பழை யாறை வடதளி நாத னைத்தொழ நம்வினை நாசமே. * வேது என்பது - வெப்பம்.
வாயி ருந்தமி ழேபடித் தாளுறா ஆயி ரஞ்சம ணும்மழி வாக்கினான் பாயி ரும்புன லாறை வடதளி மேய வன்னென வல்வினை வீடுமே.
செருத்த னைச்செயுஞ் சேணரக் கன்னுடல் எருத்தி றவிர லாலிறை யூன்றிய அருத்த னைப்பழை யாறை வடதளித் திருத்த னைத்தொழு வார்வினை தேயுமே.
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - சோமேசுவரர், தேவியார் - சோமகலாநாயகியம்மை.