திருப்பழனம் - திருக்குறுந்தொகை
ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்
5.35 திருப்பழனம் - திருக்குறுந்தொகை
திருநாவுக்கரசர்
அருவ னாய்அத்தி ஈருரி போர்த்துமை உருவ னாய்ஒற்றி யூர்பதி யாகிலும் பருவ ரால்வயல் சூழ்ந்த பழனத்தான் திருவி னாற்றிரு வேண்டுமித் தேவர்க்கே.
வையம் வந்து வணங்கி வலங்கொளும் ஐய னைஅறி யார்சிலர் ஆதர்கள் பைகொ ளாடர வார்த்த பழனன்பால் பொய்யர் காலங்கள் போக்கிடு வார்களே.
வண்ண மாக முறுக்கிய வாசிகை திண்ண மாகத் திருச்சடைச் சேர்த்தியே பண்ணு மாகவே பாடும் பழனத்தான் எண்ணும் நீரவன் ஆயிர நாமமே.
மூர்க்கப் பாம்பு பிடித்தது மூச்சிட வாக்கப் பாம்பினைக் கண்ட துணிமதி பாக்கப் பாம்பினைப் பற்றும் பழனத்தான் தார்க்கொண் மாலை சடைக்கரந் திட்டதே.
நீல முண்ட மிடற்றினன் நேர்ந்ததோர் கோல முண்ட குணத்தான் நிறைந்ததோர் பாலு முண்டு பழனன்பா லென்னிடை மாலு முண்டிறை யென்றன் மனத்துளே.
மந்த மாக வளர்பிறை சூடியோர் சந்த மாகத் திருச்சடை சாத்துவான் பந்த மாயின தீர்க்கும் பழனத்தான் எந்தை தாய்தந்தை எம்பெரு மானுமே.
மார்க்க மொன்றறி யார்மதி யில்லிகள் பூக்க ரத்திற் புரிகிலர் மூடர்கள் பார்க்க நின்று பரவும் பழனத்தான் தாட்கண் நின்று தலைவணங் கார்களே.
ஏறி னாரிமை யோர்கள் பணிகண்டு தேறு வாரலர் தீவினை யாளர்கள் பாறி னார்பணி வேண்டும் பழனத்தான் கூறி னானுமை யாளொடுங் கூடவே.
சுற்று வார்தொழு வார்சுடர் வண்ணன்மேல் தெற்றி னார்திரி யும்புர மூன்றெய்தான் பற்றி னார்வினை தீர்க்கும் பழனனை எற்றி னான்மறக் கேனெம் பிரானையே.
பொங்கு மாகடல் சூழ்இலங் கைக்கிறை அங்க மான இறுத்தருள் செய்தவன் பங்க னென்றும் பழனன் உமையொடுந் தங்கன் றானடி யேனுடை யுச்சியே. இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - ஆபத்சகாயர், தேவியார் - பெரியநாயகியம்மை.