திருப்பூந்துருத்தி - திருக்குறுந்தொகை
ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்
5.32 திருப்பூந்துருத்தி - திருக்குறுந்தொகை
திருநாவுக்கரசர்
கொடிகொள் செல்வ விழாக்குண லையறாக் கடிகொள் பூம்பொழிற் கச்சிஏ கம்பனார் பொடிகள் பூசிய பூந்துருத் திந்நகர் அடிகள் சேவடிக் கீழ்நா மிருப்பதே.
ஆர்த்த தோலுடை கட்டியோர் வேடனாய்ப் பார்த்த னோடு படைதொடு மாகிலும் பூத்த நீள்பொழிற் பூந்துருத் திந்நகர்த் தீர்த்தன் சேவடிக் கீழ்நா மிருப்பதே.
மாதி னைமதித் தானொரு பாகமாக் காத லாற்கரந் தான்சடைக் கங்கையைப் பூத நாயகன் பூந்துருத் திந்நகர்க் காதி சேவடிக் கீழ்நா மிருப்பதே.
மூவ னாய்முத லாயிவ் வுலகெலாங் காவ னாய்க்கடுங் காலனைக் காய்ந்தவன் பூவின் நாயகன் பூந்துருத் திந்கர்த் தேவன் சேவடிக் கீழ்நா மிருப்பதே.
செம்பொ னேயொக்கும் மேனியன் தேசத்தில் உம்ப ராரவ ரோடங் கிருக்கிலும் பொன்பொ னார்செல்வப் பூந்துருத் திந்நகர் நம்பன் சேவடிக் கீழ்நா மிருப்பதே.
வல்லம் பேசி வலிசெய்மூன் றூரினைக் கொல்லம் பேசிக் கொடுஞ்சரம் நூறினான் புல்லம் பேசியும் பூந்துருத் திந்நகர்ச் செல்வன் சேவடிக் கீழ்நா மிருப்பதே.
ஒருத்த னாயுல கேழுந் தொழநின்று பருத்த பாம்பொடு பான்மதி கங்கையும் பொருத்த னாகிலும் பூந்துருத் திந்நகர்த் திருத்தன் சேவடிக் கீழ்நா மிருப்பதே.
அதிரர் தேவர் இயக்கர் விச்சாதரர் கருத நின்றவர் காண்பரி தாயினான் பொருத நீர்வரு பூந்துருத் திந்நகர்ச் சதுரன் சேவடிக் கீழ்நா மிருப்பதே.
செதுக றாமனத் தார்புறங் கூறினுங் கொதுக றாக்கண்ணி னோன்பிகள் கூறினும் பொதுவின் நாயகன் பூந்துருத் திந்நகர்க் கதிபன் சேவடிக் கீழ்நா மிருப்பதே.
துடித்த தோல்வலி வாளரக் கன்றனைப் பிடித்த கைஞ்ஞெரிந் துற்றன கண்ணெலாம் பொடிக்க வூன்றிய பூந்துருத் திந்நகர்ப் படிக்கொள் சேவடிக் கீழ்நா மிருப்பதே. இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - புஷ்பவனநாதர், தேவியார் - அழகாலமர்ந்தநாயகி.