Skip to content
Thevaram

ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்

5.14 திருவிடைமருதூர் - திருக்குறுந்தொகை

திருநாவுக்கரசர்

5.14

திருவிடைமருதூர் - திருக்குறுந்தொகை

136

பாச மொன்றில ராய்ப்பல பத்தர்கள் வாச நாண்மலர் கொண்டடி வைகலும் ஈச னெம்பெரு மான்இடை மருதினிற் பூச நாம்புகு தும்புன லாடவே.

137

மறையின் நாண்மலர் கொண்டடி வானவர் முறையி னான்முனி கள்வழி பாடுசெய் இறைவன் எம்பெரு மான்இடை மருதினில் உறையும் ஈசனை உள்குமென் உள்ளமே.

138

கொன்றை மாலையுங் கூவிள மத்தமுஞ் சென்று சேரத் திகழ்சடை வைத்தவன் என்று மெந்தை பிரான்இடை மருதினை நன்று கைதொழு வார்வினை நாசமே.

139

இம்மை வானவர் செல்வம் விளைத்திடும் அம்மை யேற்பிற வித்துயர் நீத்திடும் எம்மை யாளும் இடைமரு தன்கழல் செம்மை யேதொழு வார்வினை சிந்துமே.

140

வண்ட ணைந்தன வன்னியுங் கொன்றையுங் கொண்ட ணிந்த சடைமுடிக் கூத்தனார் எண்டி சைக்கும் இடைமரு தாவென விண்டு போயறும் மேலை வினைகளே.

141

ஏற தேறும் இடைமரு தீசனார் கூறு வார்வினை தீர்க்குங் குழகனார் ஆறு செஞ்சடை வைத்த அழகனார்க் கூறி யூறி உருகுமென் உள்ளமே.

142

விண்ணு ளாரும் விரும்பப் படுவர் மண்ணு ளாரும் மதிக்கப் படுபவர் எண்ணி னார்பொழில் சூழிடை மருதினை நண்ணி னாரைநண் ணாவினை நாசமே.

143

வெந்த வெண்பொடிப் பூசும் விகிர்தனார் கந்த மாலைகள் சூடுங் கருத்தனார் எந்தை யென்னிடை மருதினில் ஈசனைச் சிந்தை யால்நினை வார்வினை தேயுமே.

144

வேத மோதும் விரிசடை அண்ணலார் பூதம் பாடநின் றாடும் புனிதனார் ஏதந் தீர்க்கும் இடைமரு தாவென்று பாத மேத்தப் பறையுநம் பாவமே.

145

கனியி னுங்கட்டி பட்ட கரும்பினும் பனிம லர்க்குழற் பாவைநல் லாரினுந் தனிமு டிகவித் தாளு மரசினும் இனியன் றன்னடைந் தார்க்கிடை மருதனே.

146

முற்றி லாமதி சூடும் முதல்வனார் ஒற்றி னார்மலை யாலரக் கன்முடி எற்றி னார்கொடி யாரிடை மருதினைப் பற்றி னாரைப்பற் றாவினை பாவமே.