திருமீயச்சூர் இளங்கோயில் - திருக்குறுந்தொகை
ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்
5.11 திருமீயச்சூர் இளங்கோயில் - திருக்குறுந்தொகை
திருநாவுக்கரசர்
தோற்றுங் கோயிலுந் தோன்றிய கோயிலும் வேற்றுக் கோயில் பலவுள மீயச்சூர்க் கூற்றம் பாய்ந்த குளிர்புன் சடையரற் கேற்றங் கோயில்கண் டீரிளங் கோயிலே.
வந்த னையடைக் கும்மடித் தொண்டர்கள் பந்த னைசெய்து பாவிக்க நின்றவன் சிந்த னைதிருத் துந்திரு மீயச்சூர் எந்த மையுடை யாரிளங் கோயிலே.
பஞ்ச மந்திர மோதும் பரமனார் அஞ்ச ஆனை யுரித்தன லாடுவார் நெஞ்சம் வாழி நினைந்திரு மீயச்சூர் எந்த மையுடை யாரிளங் கோயிலே.
நாறு மல்லிகை கூவிளஞ் செண்பகம் வேறு வேறு விரித்த சடையிடை ஆறு கொண்டுகந் தான்றிரு மீயச்சூர் ஏறு கொண்டுகந் தாரிளங் கோயிலே.
வெவ்வ வண்ணத்து நாகம் வெருவவே கவ்வ வண்ணக் கனல்விரித் தாடுவர் செவ்வ வண்ணந் திகழ்திரு மீயச்சூர் எவ்வ வண்ணம் பிரானிளங் கோயிலே.
பொன்னங் கொன்றையும் பூவணி மாலையும் பின்னுஞ் செஞ்சடை மேற்பிறை சூடிற்று மின்னு மேகலை யாளொடு மீயச்சூர் இன்ன நாள்அக லாரிளங் கோயிலே.
படைகொள் பூதத்தன் பைங்கொன்றைத் தாரினன் சடைகொள் வெள்ளத்தன் சாந்தவெண் ணீற்றினன் விடைகொ ளூர்தியி னான்றிரு மீயச்சூர் இடைகொண் டேத்தநின் றாரிளங் கோயிலே.
ஆறு கொண்ட சடையினர் தாமுமோர் வேறு கொண்டதோர் வேடத்த ராகிலுங் கூறு கொண்டுகந் தாளொடு மீயச்சூர் ஏறு கொண்டுகந் தாரிளங் கோயிலே.
வேதத் தானென்பர் வேள்வியு ளானென்பர் பூதத் தானென்பர் புண்ணியன் றன்னையே கீதத் தான்கிள ருந்திரு மீயச்சூர் ஏதந் தீர்க்கநின் றாரிளங் கோயிலே.
கடுக்கண் டன்கயி லாய மலைதனை எடுக்க லுற்ற இராவணன் ஈடற விடுக்க ணின்றி வெகுண்டவன் மீயச்சூர் இடுக்கண் தீர்க்கநின் றாரிளங் கோயிலே.