குறைந்த - திருநேரிசை
நான்காம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்
4.79 குறைந்த - திருநேரிசை
திருநாவுக்கரசர்
தம்மானங் காப்ப தாகித் தையலார் வலையு ளாழ்ந்து அம்மானை அமுதன் றன்னை ஆதியை அந்த மாய செம்மான ஒளிகொள் மேனிச் சிந்தையு ளொன்றி நின்ற எம்மானை நினைய மாட்டேன் என்செய்வான் தோன்றி னேனே.
மக்களே மணந்த தார மவ்வயிற் றவரை யோம்புஞ் சிக்குளே யழுந்தி ஈசன் திறம்படேன் றவம தோரேன் கொப்புளே போலத் தோன்றி யதனுளே மறையக் கண்டும் இக்களே பரத்தை யோம்ப என்செய்வான் தோன்றி னேனே.
கூழையே னாக மாட்டேன் கொடுவினைக் குழியில் வீழ்ந்து ஏழினின் னிசையி னாலும் இறைவனை யேத்த மாட்டேன் மாழையொண் கண்ணின் நல்ல மடந்தைமார் தமக்கும் பொல்லேன் ஏழையே னாகி நாளு மென்செய்வான் தோன்றி னேனே.
முன்னையென் வினையி னாலே மூர்த்தியை நினைய மாட்டேன் பின்னைநான் பித்த னாகிப் பிதற்றுவன் பேதை யேன்நான் என்னுளே மன்னி நின்ற சீர்மைய தாயி னானை என்னுளே நினைய மாட்டேன் என்செய்வான் தோன்றி னேனே.
கறையணி கண்டன் றன்னைக் காமரங் கற்று மில்லேன் பிறைநுதற் பேதை மாதர் பெய்வளை யார்க்கு மல்லேன் மறைநவில் நாவி னானை மன்னிநின் றிறைஞ்சி நாளும் இறையேயு மேத்த மாட்டேன் என்செய்வான் தோன்றி னேனே. (*) இப்பதிகத்தில் 6,7,8,9-ம்செய்யுட்கள் மறைந்து போயின.
வளைத்துநின் றைவர் கள்வர் வந்தெனை நடுக்கஞ் செய்யத் தளைத்துவைத் துலையை யேற்றித் தழலெரி மடுத்த நீரில் திளைத்துநின் றாடு கின்ற ஆமைபோல் தெளிவி லாதேன் இளைத்துநின் றாடு கின்றேன் என்செய்வான் தோன்றி னேனே.