Skip to content
Thevaram

நான்காம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்

4.57 திருஆவடுதுறை - திருநேரிசை

திருநாவுக்கரசர்

4.57

திருஆவடுதுறை - திருநேரிசை

548

மஞ்சனே மணியு மானாய் மரகதத் திரளு மானாய் நெஞ்சுளே புகுந்து நின்று நினைதரு நிகழ்வி னானே துஞ்சும்போ தாக வந்து துணையெனக் காகி நின்று அஞ்சலென் றருள வேண்டும் ஆவடு துறையு ளானே.

549

நானுகந் துன்னை நாளும் நணுகுமா கருதி யேயும் ஊனுகந் தோம்பும் நாயேன் உள்ளுற ஐவர் நின்றார் தானுகந் தேயு கந்த தகவிலாத் தொண்ட னேன்நான் ஆனுகந் தேறு வானே ஆவடு துறையு ளானே.

550

கட்டமே வினைக ளான காத்திவை நோக்கி ஆளாய் ஒட்டவே ஒட்டி நாளும் உன்னையுள் வைக்க மாட்டேன் பட்டவான் தலைகை யேந்திப் பலிதிரிந் தூர்கள் தோறும் அட்டமா வுருவி னானே ஆவடு துறையு ளானே.

551

பெருமைநன் றுடைய தில்லை யென்றுநான் பேச மாட்டேன் ஒருமையால் உன்னை உள்கி உகந்துவா னேற மாட்டேன் கருமையிட் டாய வூனைக் கட்டமே கழிக்கின் றேன்நான் அருமையா நஞ்ச முண்ட ஆவடு துறையு ளானே.

552

துட்டனாய் வினைய தென்னுஞ் சுழித்தலை அகப்பட் டேனைக் கட்டனாய் ஐவர் வந்து கலக்காமைக் காத்துக் கொள்வாய் மட்டவிழ் கோதை தன்னை மகிழ்ந்தொரு பாகம் வைத்து அட்டமா நாக மாட்டும் ஆவடு துறையு ளானே.

553

காரழற் கண்ட மேயாய் கடிமதிற் புரங்கள் மூன்றும் ஓரழல் அம்பி னாலே யுகைத்துத்தீ எரிய மூட்டி நீரழற் சடையு ளானே நினைப்பவர் வினைகள் தீர்ப்பாய் ஆரழல் ஏந்தி யாடும் ஆவடு துறையு ளானே.

554

செறிவிலேன் சிந்தை யுள்ளே சிவனடி தெரிய மாட்டேன் குறியிலேன் குணமொன் றில்லேன் கூறுமா கூற மாட்டேன் நெறிபடு மதியொன் றில்லேன் நினையுமா நினைய மாட்டேன் அறிவிலேன் அயர்த்துப் போனேன் ஆவடு துறையு ளானே.

555

கோலமா மங்கை தன்னைக் கொண்டொரு கோல மாய சீலமே அறிய மாட்டேன் செய்வினை மூடி நின்று ஞாலமாம் இதனுள் என்னை நைவியா வண்ணம் நல்காய் ஆலமா நஞ்ச முண்ட ஆவடு துறையு ளானே.

556

நெடியவன் மலரி னானும் நேர்ந்திரு பாலும் நேடக் கடியதோர் உருவ மாகிக் கனலெரி யாகி நின்ற வடிவின வண்ண மென்றே என்றுதாம் பேச லாகார் அடியனேன் நெஞ்சி னுள்ளார் ஆவடு துறையு ளானே.

557

மலைக்குநே ராய ரக்கன் சென்றுற மங்கை அஞ்சத் தலைக்குமேற் கைக ளாலே தாங்கினான் வலியை மாள உலப்பிலா விரலால் ஊன்றி ஒறுத்தவற் கருள்கள் செய்து அலைத்தவான் கங்கை சூடும் ஆவடு துறையு ளானே.