Skip to content
Thevaram

நான்காம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்

4.44 திருஏகம்பம் - திருநேரிசை

திருநாவுக்கரசர்

4.44

திருஏகம்பம் - திருநேரிசை

434

நம்பனை நகர மூன்றும் எரியுண வெருவ நோக்கும் அம்பனை அமுதை யாற்றை அணிபொழிற் கச்சி யுள்ளே கம்பனைக் கதிர்வெண் திங்கட் செஞ்சடைக் கடவுள் தன்னைச் செம்பொனைப் பவளத் தூணைச் சிந்தியா எழுகின் றேனே.

435

ஒருமுழம் உள்ள குட்டம் ஒன்பது துளையு டைத்தாய் அரைமுழம் அதன் அகலம் அதனில்வாழ் முதலை ஐந்து பெருமுழை வாய்தல் பற்றிக் கிடந்துநான் பிதற்று கின்றேன் கருமுகில் தவழும் மாடக் கச்சியே கம்ப னீரே.

436

மலையினார் மகளோர் பாக மைந்தனார் மழுவொன் றேந்திச் சிலையினால் மதில்கள் மூன்றுந் தீயெழச் செற்ற செல்வர் இலையினார் சூலம் ஏந்தி ஏகம்பம் மேவி னாரைத் தலையினால் வணங்க வல்லார் தலைவர்க்குந் தலைவர் தாமே.

437

பூத்தபொற் கொன்றை மாலை புரிசடைக் கணிந்த செல்வர் தீர்த்தமாங் கங்கை யாளைத் திருமுடி திகழ வைத்து ஏத்துவார் ஏத்த நின்ற ஏகம்பம் மேவி னாரை வாழ்த்துமா றறிய மாட்டேன் மால்கொடு மயங்கி னேனே.

438

மையினார் மலர்நெ டுங்கண் மங்கையோர் பங்க ராகிக் கையிலோர் கபாலம் ஏந்திக் கடைதொறும் பலிகொள் வார்தாம் எய்வதோர் ஏனம் ஓட்டி ஏகம்பம் மேவி னாரைக் கையினாற் றொழவல் லார்க்குக் கடுவினை களைய லாமே.

439

தருவினை மருவுங் கங்கை தங்கிய சடையன் எங்கள் அருவினை அகல நல்கும் அண்ணலை அமரர் போற்றுந் திருவினைத் திருவே கம்பஞ் செப்பிட உறைய வல்ல உருவினை உருகி ஆங்கே உள்ளத்தால் உகக்கின் றேனே.

440

கொண்டதோர் கோல மாகிக் கோலக்கா வுடைய கூத்தன் உண்டதோர் நஞ்ச மாகில் உலகெலாம் உய்ய உண்டான் எண்டிசை யோரும் ஏத்த நின்றஏ கம்பன் றன்னைக் கண்டுநான் அடிமை செய்வான் கருதியே திரிகின் றேனே.

441

படமுடை அரவி னோடு பனிமதி யதனைச் சூடிக் கடமுடை யுரிவை மூடிக் கண்டவர் அஞ்ச அம்ம இடமுடைக் கச்சி தன்னுள் ஏகம்பம் மேவி னான்றன் நடமுடை யாடல் காண ஞாலந்தான் உய்ந்த வாறே.

442

பொன்றிகழ் கொன்றை மாலை பொருந்திய நெடுந்தண் மார்பர் நன்றியிற் புகுந்தெ னுள்ளம் மெள்ளவே நவில நின்று குன்றியில் அடுத்த மேனிக் குவளையங் கண்டர் எம்மை இன்றுயில் போது கண்டார் இனியர்ஏ கம்ப னாரே.

443

துருத்தியார் பழனத் துள்ளார் தொண்டர்கள் பலரும் ஏத்த அருத்தியால் அன்பு செய்வார் அவரவர்க் கருள்கள் செய்தே எருத்தினை இசைய ஏறி ஏகம்பம் மேவி னார்க்கு வருத்திநின் றடிமை செய்வார் வல்வினை மாயு மன்றே.