Skip to content
Thevaram

நான்காம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்

4.23 கோயில் - திருநேரிசை

திருநாவுக்கரசர்

4.23

கோயில் - திருநேரிசை பண் - கொல்லி

229

பத்தனாய்ப் பாட மாட்டேன் பரமனே பரம யோகீ எத்தினாற் பத்தி செய்கேன் என்னைநீ இகழ வேண்டா முத்தனே முதல்வா தில்லை அம்பலத் தாடு கின்ற அத்தாவுன் ஆடல் காண்பான் அடியனேன் வந்த வாறே.

230

கருத்தனாய்ப் பாட மாட்டேன் காம்பன தோளி பங்கா ஒருத்தரா லறிய வொண்ணாத் திருவுரு வுடைய சோதீ திருத்தமாந் தில்லை தன்னுட் டிகழ்ந்தசிற் றம்ப லத்தே நிருத்தம்நான் காண வேண்டி நேர்பட வந்த வாறே.

231

கேட்டிலேன் கிளைபி ரியேன் கேட்குமா கேட்டி யாகில் நாட்டினேன் நின்றன் பாதம் நடுப்பட நெஞ்சி னுள்ளே மாட்டினீர் வாளை பாயு மல்குசிற் றம்ப லத்தே கூட்டமாங் குவிமு லையாள் கூடநீ யாடு மாறே.

232

சிந்தையைத் திகைப்பி யாதே செறிவுடை அடிமை செய்ய எந்தைநீ அருளிச் செய்யாய் யாதுநான் செய்வ தென்னே செந்தியார் வேள்வி ஓவாத் தில்லைச்சிற் றம்ப லத்தே அந்தியும் பகலும் ஆட அடியிணை அலசுங் கொல்லோ.

233

கண்டவா திரிந்து நாளுங் கருத்தினால் நின்றன் பாதங் கொண்டிருந் தாடிப் பாடிக் கூடுவன் குறிப்பி னாலே வண்டுபண் பாடுஞ் சோலை மல்குசிற் றம்ப லத்தே எண்டிசை யோரு மேத்த இறைவநீ யாடு மாறே.

234

பார்த்திருந் தடிய னேன்நான் பரவுவன் பாடி யாடி மூர்த்தியே என்பன் உன்னை மூவரில் முதல்வன் என்பன் ஏத்துவார் இடர்கள் தீர்ப்பாய் தில்லைச்சிற் றம்ப லத்துக் கூத்தாவுன் கூத்துக் காண்பான் கூடநான் வந்த வாறே.

235

பொய்யினைத் தவிர விட்டுப் புறமலா அடிமை செய்ய ஐயநீ அருளிச் செய்யாய் ஆதியே ஆதி மூர்த்தி வையகந் தன்னில் மிக்க மல்குசிற் றம்ப லத்தே பையநின் னாடல் காண்பான் பரமநான் வந்த வாறே.

236

மனத்தினார் திகைத்து நாளும் மாண்பலா நெறிகள் மேலே கனைப்பரால் என்செய் கேனோ கறையணி கண்டத் தானே தினைத்தனை வேதங் குன்றாத் தில்லைச்சிற் றம்ப லத்தே அனைத்துநின் னிலயங் காண்பான் அடியனேன் வந்த வாறே.

237

நெஞ்சினைத் தூய்மை செய்து நினைக்குமா நினைப்பி யாதே வஞ்சமே செய்தி யாலோ வானவர் தலைவ னேநீ மஞ்சடை சோலைத் தில்லை மல்குசிற் றம்ப லத்தே அஞ்சொலாள் காண நின்று அழகநீ யாடு மாறே.

238

மண்ணுண்ட மால வனும் மலர்மிசை மன்னி னானும் விண்ணுண்ட திருவு ருவம் விரும்பினார் காண மாட்டார் திண்ணுண்ட திருவே மிக்க தில்லைச்சிற் றம்ப லத்தே பண்ணுண்ட பாட லோடும் பரமநீ யாடு மாறே.