திருவாரூர்திருவாதிரைத்திருப்பதிகம் பண் - குறிஞ்சி
நான்காம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்
4.21 திருவாரூர்திருவாதிரைத்திருப்பதிகம்
திருநாவுக்கரசர்
முத்து விதான மணிப்பொற் கவரி முறையாலே பத்தர்க ளோடு பாவையர் சூழப் பலிப்பின்னே வித்தகக் கோல வெண்டலை மாலை விரதிகள் அத்தன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
நணியார் சேயார் நல்லார் தீயார் நாடோ றும் பிணிதான் தீரும் என்று பிறங்கிக் கிடப்பாரும் மணியே பொன்னே மைந்தா மணாளா என்பார்கட் கணியான் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
வீதிகள் தோறும் வெண்கொடி யோடுவி தானங்கள் சோதிகள் விட்டுச் சுடர்மா மணிகள் ஒளிதோன்றச் சாதிக ளாய பவளமு முத்துத் தாமங்கள் ஆதி ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
குணங்கள் பேசிக் கூடிப் பாடித் தொண்டர்கள் பிணங்கித் தம்மிற் பித்தரைப் போலப் பிதற்றுவார் வணங்கி நின்று வானவர் வந்து வைகலும் அணங்கன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
நிலவெண் சங்கும் பறையும் ஆர்ப்ப நிற்கில்லாப் பலரு மிட்ட கல்ல வடங்கள் பரந்தெங்குங் கலவ மஞ்ஞை காரென் றெண்ணிக் களித்துவந் தலம ராரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
விம்மா வெருவா விழியாத் தெழியா வெருட்டுவார் தம்மாண் பிலராய்த் தரியார் தலையான் முட்டுவார் எம்மான் ஈசன் எந்தை எனப்பன் என்பார்கட் கம்மான் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
செந்துவர் வாயார் செல்வன் சேவடி சிந்திப்பார் மைந்தர்க ளோடு மங்கையர் கூடிம யங்குவார் இந்திர னாதி வானவர் சித்தர் எடுத்தேத்தும் அந்திரன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
முடிகள் வணங்கி மூவா தார்கண் முன்செல்ல வடிகொள் வேய்த்தோள் வான்அர மங்கையர் பின்செல்லப் பொடிகள் பூசிப் பாடுந் தொண்டர் புடைசூழ அடிகள் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
துன்பம் நும்மைத் தொழாத நாள்கள் என்பாரும் இன்பம் நும்மை யேத்து நாள்கள் என்பாரும் நும்பின் எம்மை நுழையப் பணியே என்பாரும் அன்பன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
பாரூர் பௌவத் தானைப் பத்தர் பணிந்தேத்தச் சீரூர் பாடல் ஆடல் அறாத செம்மாப்பார்ந் தோரூர் ஒழியா துலகம் எங்கும் எடுத்தேத்தும் ஆரூ ரன்றன் ஆதிரை நாளால் அதுவண்ணம்.