Skip to content
Thevaram

நான்காம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்

4.104 திருநாகைக்காரோணம் - திருவிருத்தம்

திருநாவுக்கரசர்

4.104

திருநாகைக்காரோணம் - திருவிருத்தம்

993

வடிவுடை மாமலை மங்கைபங் காகங்கை வார்சடையாய் கடிகமழ் சோலை சுலவு கடல்நாகைக் காரோணனே பிடிமத வாரணம் பேணுந் துரகநிற் கப்பெரிய இடிகுரல் வெள்ளெரு தேறுமி தென்னைகொல் எம்மிறையே.

994

கற்றார் பயில்கடல் நாகைக்கா ரோணத்தெங் கண்ணுதலே விற்றாங் கியகரம் வேல்நெடுங் கண்ணி வியன்கரமே நற்றாள் நெடுஞ்சிலை நாண்வலித் தகர நின்கரமே செற்றார் புரஞ்செற்ற சேவக மென்னைகொல் செப்புமினே.

995

தூமென் மலர்க்கணை கோத்துத்தீ வேள்வி தொழிற்படுத்த காமன் பொடிபடக் காய்ந்த கடல்நாகைக் காரோணநின் நாமம் பரவி நமச்சிவா யவென்னும் அஞ்செழுத்துஞ் சாமன் றுரைக்கத் தருதிகண் டாயெங்கள் சங்கரனே.

996

பழிவழி யோடிய பாவிப் பறிதலைக் குண்டர்தங்கள் மொழிவழி யோடி முடிவேன் முடியாமைக் காத்துக்கொண்டாய் கழிவழி யோதம் உலவு கடல்நாகைக் காரோணவென் வழிவழி யாளாகும் வண்ணம் அருளெங்கள் வானவனே.

997

செந்துவர் வாய்க்கருங் கண்ணிணை வெண்ணகைத் தேமொழியார் வந்து வலஞ்செய்து மாநட மாட மலிந்தசெல்வக் கந்த மலிபொழில் சூழ்கடல் நாகைக்கா ரோணமென்றுஞ் சிந்தைசெய் வாரைப் பிரியா திருக்குந் திருமங்கையே.

998

பனைபுரை கைம்மத யானை யுரித்த பரஞ்சுடரே கனைகடல் சூழ்தரு நாகைக்கா ரோணத்தெங் கண்ணுதலே மனைதுறந் தல்லுணா வல்லமண் குண்டர் மயக்கைநீக்கி எனைநினைந் தாட்கொண்டாய்க் கென்னினி யான்செயும் இச்சைகளே.

999

சீர்மலி செல்வம் பெரிதுடை யசெம்பொன் மாமலையே கார்மலி சோலை சுலவு கடல்நாகைக் காரோணனே வார்மலி மென்முலை யார்பலி வந்திடச் சென்றிரந்து ஊர்மலி பிச்சைகொண் டுண்பது மாதிமை யோவுரையே.

1000

வங்கம் மலிகடல் நாகைக்கா ரோணத்தெம் வானவனே எங்கள் பெருமானோர் விண்ணப்பம் உண்டது கேட்டருளீர் கங்கை சடையுட் கரந்தாயக் கள்ளத்தை மெள்ளவுமை நங்கை அறியிற்பொல் லாதுகண்டா யெங்கள் நாயகனே. (*) இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் மறைந்து போயிற்று.

1001

கருந்தடங் கண்ணியுந் தானுங் கடல்நாகைக் காரோணத்தான் இருந்த திருமலை யென்றிறைஞ் சாதன் றெடுக்கலுற்றான் பெருந்தலை பத்தும் இருபது தோளும் பிதிர்ந்தலற இருந்தரு ளிச்செய்த தேமற்றுச் செய்திலன் எம்மிறையே.