Skip to content
Thevaram

மூன்றாம் திருமுறை – திருக்கடைக்காப்பு

3.87 திருநள்ளாறு - திருவிராகம்

திருஞானசம்பந்தர்

3.87

திருநள்ளாறு - திருவிராகம் பண் - சாதாரி

934

தளிரிள வளரொளி தனதெழில் தருதிகழ் மலைமகள் குளிரிள வளரொளி வனமுலை யிணையவை குலவலின் நளிரிள வளரொளி மருவுநள் ளாறர்தம் நாமமே மிளிரிள வளரெரி யிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.

935

போதமர் தருபுரி குழலெழின் மலைமகள் பூணணி சீதம தணிதரு முகிழிள வனமுலை செறிதலின் நாதம தெழிலுரு வனையநள் ளாறர்தந் நாமமே மீதம தெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.

936

இட்டுறு மணியணி யிணர்புணர் வளரொளி யெழில்வடங் கட்டுறு கதிரிள வனமுலை யிணையொடு கலவலின் நட்டுறு செறிவயல் மருவுநள் ளாறர்தந் நாமமே இட்டுறு மெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.

937

மைச்சணி வரியரி நயனிதொன் மலைமகள் பயனுறு கச்சணி கதிரிள வனமுலை யவையொடு கலவலின் நச்சணி மிடறுடை யடிகள்நள் ளாறர்தந் நாமமே மெச்சணி யெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.

938

பண்ணியல் மலைமகள் கதிர்விடு பருமணி யணிநிறக் கண்ணியல் கலசம தனமுலை யிணையொடு கலவலின் நண்ணிய குளிர்புனல் புகுதுநள் ளாறர்தந் நாமமே விண்ணிய லெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.

939

போதுறு புரிகுழல் மலைமகள் இளவளர் பொன்னணி சூதுறு தளிர்நிற வனமுலை யவையொடு துதைதலின் தாதுறு நிறமுடை யடிகள்நள் ளாறர்தந் நாமமே மீதுறு மெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.

940

கார்மலி நெறிபுரி சுரிகுழல் மலைமகள் கவினுறு சீர்மலி தருமணி யணிமுலை திகழ்வொடு செறிதலின் தார்மலி நகுதலை யுடையநள் ளாறர்தந் நாமமே ஏர்மலி யெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.

941

மன்னிய வளரொளி மலைமகள் தளிர்நிற மதமிகு பொன்னியல் மணியணி கலசம தனமுலை புணர்தலின் தன்னியல் தசமுகன் நெறியநள் ளாறர்தந் நாமமே மின்னிய லெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.

942

கான்முக மயிலியன் மலைமகள் கதிர்விடு கனமிகு பான்முக மியல்பணை யிணைமுலை துணையொடு பயிறலின் நான்முகன் அரியறி வரியநள் ளாறர்தந் நாமமே மேன்முக வெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.

943

அத்திர நயனிதொன் மலைமகள் பயனுறு மதிசயச் சித்திர மணியணி திகழ்முலை யிணையொடு செறிதலின் புத்தரொ டமணர்பொய் பெயருநள் ளாறர்தந் நாமமே மெய்த்திர ளெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.

944

சிற்றிடை அரிவைதன் வனமுலை யிணையொடு செறிதரு நற்றிற முறுகழு மலநகர் ஞானசம் பந்தன கொற்றவன் எதிரிடை யெரியினி லிடஇவை கூறிய சொற்றெரி யொருபதும் அறிபவர் துயரிலர் தூயரே.

இது சமணர் வாதின்பொருட்டுத் தீயிலிடுதற்கு போகமார்த்த பூண்முலையாளென்னும் பதிகம் உதயமாக இது தீயில் பழுது படாது என்னுந் துணிவுகொண்டு அருளிச்செய்த பதிகம்.