திருக்கடவூர்வீரட்டம் பண் - காந்தாரபஞ்சமம்
மூன்றாம் திருமுறை – திருக்கடைக்காப்பு
3.8 திருக்கடவூர்வீரட்டம்
திருஞானசம்பந்தர்
சடையுடை யானும்நெய் யாடலா னுஞ்சரி கோவண உடையுடை யானுமை ஆர்ந்தவொண் கண்ணுமை கேள்வனுங் கடையுடை நன்னெடு மாடமோங் குங்கட வூர்தனுள் விடையுடை யண்ணலும் வீரட்டா னத்தர னல்லனே.
எரிதரு வார்சடை யானும்வெள் ளையெரு தேறியும் புரிதரு மாமலர்க் கொன்றைமா லைபுனைந் தேத்தவே கரிதரு காலனைச் சாடினா னுங்கட வூர்தனுள் விரிதரு தொல்புகழ் வீரட்டா னத்தர னல்லனே.
நாதனுந் நள்ளிரு ளாடினா னுந்நளிர் போதின்கண் பாதனும் பாய்புலித் தோலினா னும்பசு வேறியுங் காதலர் தண்கட வூரினா னுங்கலந் தேத்தவே வேதம தோதியும் வீரட்டா னத்தர னல்லனே.
மழுவமர் செல்வனும் மாசிலா தபல பூதமுன் முழவொலி யாழ்குழல் மொந்தைகொட் டம்முது காட்டிடைக் கழல்வளர் கால்குஞ்சித் தாடினா னுங்கட வூர்தனுள் விழவொலி மல்கிய வீரட்டா னத்தர னல்லனே.
சுடர்மணிச் சுண்ணவெண் ணீற்றினா னுஞ்சுழல் வாயதோர் படமணி நாகம் அரைக்கசைத் தபர மேட்டியுங் கடமணி மாவுரித் தோலினா னுங்கட வூர்தனுள் விடமணி கண்டனும் வீரட்டா னத்தர னல்லனே.
பண்பொலி நான்மறை பாடியா டிப்பல வூர்கள்போய் உண்பலி கொண்டுழல் வானும்வா னின்னொளி மல்கிய கண்பொலி நெற்றிவெண் டிங்களா னுங்கட வூர்தனுள் வெண்பொடிப் பூசியும் வீரட்டா னத்தர னல்லனே.
செவ்வழ லாய்நில னாகிநின் றசிவ மூர்த்தியும் முவ்வழல் நான்மறை யைந்துமா யமுனி கேள்வனுங் கவ்வழல் வாய்க்கத நாகமார்த் தான்கட வூர்தனுள் வெவ்வழ லேந்துகை வீரட்டா னத்தர னல்லனே.
அடியிரண் டோ ருடம் பைஞ்ஞான் கிருபது தோள்தச முடியுடை வேந்தனை மூர்க்கழித் தமுதல் மூர்த்தியுங் கடிகம ழும்பொழில் சூழுமந் தண்கட வூர்தனுள் வெடிதலை யேந்தியும் வீரட்டா னத்தர னல்லனே.
வரைகுடை யாமழை தாங்கினா னும்வளர் போதின்கண் புரைகடிந் தோங்கிய நான்முகத் தான்புரிந் தேத்தவே கரைகடல் சூழ்வையங் காக்கின்றா னுங்கட வூர்தனுள் விரைகமழ் பூம்பொழில் வீரட்டா னத்தர னல்லனே.
தேரரும் மாசுகொள் மேனியா ருந்தெளி யாததோர் ஆரருஞ் சொற்பொரு ளாகிநின் றஎம தாதியான் காரிளங் கொன்றைவெண் டிங்களா னுங்கட வூர்தனுள் வீரமுஞ் சேர்கழல் வீரட்டா னத்தர னல்லனே.
வெந்தவெண் ணீறணி வீரட்டா னத்துறை வேந்தனை அந்தணர் தங்கட வூருளா னையணி காழியான் சந்தமெல் லாமடிச் சாத்தவல் லமறை ஞானசம் பந்தன செந்தமிழ் பாடியா டக்கெடும் பாவமே.