Skip to content
Thevaram

மூன்றாம் திருமுறை – திருக்கடைக்காப்பு

3.36 திருக்காளத்தி

திருஞானசம்பந்தர்

3.36

திருக்காளத்தி பண் - கொல்லி

381

சந்தமார் அகிலொடு சாதிதேக் கம்மரம் உந்துமா முகலியின் கரையினில் உமையொடும் மந்தமார் பொழில்வளர் மல்குவண் காளத்தி எந்தையார் இணையடி யென்மனத் துள்ளவே.

382

ஆலமா மரவமோ டமைந்தசீர்ச் சந்தனஞ் சாலமா பீலியுஞ் சண்பக முந்தியே காலமார் முகலிவந் தணைதரு காளத்தி நீலமார் கண்டனை நினையுமா நினைவதே.

383

கோங்கமே குரவமே கொன்றையம் பாதிரி மூங்கில்வந் தணைதரு முகலியின் கரையினில் ஆங்கமர் காளத்தி யடிகளை அடிதொழ வீங்குவெந் துயர்கெடும் வீடெளி தாகுமே.

384

கரும்புதேன் கட்டியுங் கதலியின் கனிகளும் அரும்புநீர் முகலியின் கரையினி லணிமதி ஒருங்குவார் சடையினன் காளத்தி யொருவனை விரும்புவா ரவர்கள்தாம் விண்ணுல காள்வரே.

385

வரைதரும் அகிலொடு மாமுத்தம் உந்தியே திரைதரு முகலியின் கரையினில் தேமலர் விரைதரு சடைமுடிக் காளத்தி விண்ணவன் நிரைதரு கழலிணை நித்தலும் நினைமினே. (*) இப்பதிகத்தில் 6-ம், 7-ம் செய்யுட்கள் மறைந்து போயின.

386

முத்துமா மணிகளும் முழுமலர்த் திரள்களும் எத்துமா முகலியின் கரையினில் எழில்பெறக் கத்திட அரக்கனைக் கால்விரல் ஊன்றிய அத்தன்றன் காளத்தி அணைவது கருமமே.

387

மண்ணுமா வேங்கையும் மருதுகள் பீழ்ந்துந்தி நண்ணுமா முகலியின் கரையினில் நன்மைசேர் வண்ணமா மலரவன் மாலவன் காண்கிலா அண்ணலார் காளத்தி ஆங்கணைந் துய்ம்மினே.

388

வீங்கிய உடலினர் விரிதரு துவருடைப் பாங்கிலார் சொலைவிடும் பரனடி பணியுமின் ஓங்குவண் காளத்தி யுள்ளமோ டுணர்தர வாங்கிடும் வினைகளை வானவர்க் கொருவனே.

389

அட்டமா சித்திகள் அணைதரு காளத்தி வட்டவார் சடையனை வயலணி காழியான் சிட்டநான் மறைவல ஞானசம் பந்தன்சொல் இட்டமாப் பாடுவார்க் கில்லையாம் பாவமே.