பிற்சேர்க்கை 2. திருக்கிளியன்னவூர் பண் - கௌசிகம்
மூன்றாம் திருமுறை – பிற்சேர்க்கை
பிற்சேர்க்கை 2. திருக்கிளியன்னவூர்
திருஞானசம்பந்தர்
தார்சி றக்கும் சடைக்கணி வள்ளலின் சீர்சி றக்கும் துணைப்பதம் உன்னுவோர் பேர்சி றக்கும் பெருமொழி உய்வகை ஏர்சி றக்கும் கிளியன்ன வூரனே.
வன்மை செய்யும் வறுமைவந் தாலுமே தன்மை யில்லவர் சார்பிருந் தாலுமே புன்மைக் கன்னியர் பூசலுற் றாலுமே நன்மை யுற்ற கிளியன்ன வூரனே.
பன்னி நின்ற பனுவல் அகத்தியன் உன்னி நின்று உறுத்தும் சுகத்தவன் மன்னி நாகம் முகத்தவர் ஓதலும் முன்னில் நின்ற கிளியன்ன வூரனே.
அன்பர் வேண்டும் அவையளி சோதியான் வன்பர் நெஞ்சில் மருவல்இல் லாமுதற் துன்பந் தீர்த்துச் சுகங்கொடு கண்ணுதல் இன்பந் தேக்குங் கிளியன்ன வூரனே.
செய்யும் வண்ணஞ் சிரித்துப் புரம்மிசை பெய்யும் வண்ணப் பெருந்தகை யானதோர் உய்யும் வண்ணமிங் குன்னருள் நோக்கிட மெய்யும் வண்ணக் கிளியன்ன வூரனே.
எண்பெ றாவினைக் கேதுசெய் நின்னருள் நண்பு றாப்பவம் இயற்றிடில் அந்நெறி மண்பொ றாமுழுச் செல்வமும் மல்குமால் புண்பொ றாதகி ளியன்ன வூரனே.
மூவ ராயினும் முக்கண்ண நின்னருள் மேவு றாதுவி லக்கிடற் பாலரோ தாவு றாதுன தைந்தெழுத் துன்னிட தேவ ராக்குங் கிளியன்ன வூரனே.
திரம் மிகுத்த சடைமுடி யான்வரை உரம் மிகுத்த இராவணன் கீண்டலும் நிரம் மிகுத்து நெரித்தவன் ஓதலால் வரம் மிகுத்த கிளியன்ன வூரனே.
நீதி யுற்றிடும் நான்முகன் நாரணன் பேத முற்றுப் பிரிந்தழ லாய்நிமிர் நாதன் உற்றன நன்மலர் பாய்இருக் கீதம் ஏற்ற கிளியன்ன வூரனே.
மங்கை யர்க்கர சோடுகு லச்சிறை பொங்க ழற்சுரம் போக்கெனப் பூழியன் சங்கை மாற்றிச் சமணரைத் தாழ்த்தவும் இங்கு ரைத்த கிளியன்ன வூரனே.
நிறைய வாழ்கிளி யன்னவூர் ஈசனை உறையும் ஞானசம் பந்தன்சொல் சீரினை அறைய நின்றன பத்தும்வல் லார்க்குமே குறையி லாது கொடுமை தவிர்வரே.