Skip to content
Thevaram

இரண்டாம் திருமுறை – திருக்கடைக்காப்பு

2.78 திருவிளநகர்

திருஞானசம்பந்தர்

2.78

திருவிளநகர் பண் - காந்தாரம்

844

ஒளிரிளம்பிறை சென்னிமேல் உடையர் கோவணஆடையர் குளிரிளம்மழை தவழ்பொழிற் கோலநீர்மல்கு காவிரி நளிரிளம்புனல் வார்துறை நங்கைகங்கையை நண்ணினார் மிளிரிளம்பொறி அரவினார் மேயதுவிள நகரதே.

845

அக்கரவ்வணி கலனென அதனொடார்த்ததோர் ஆமைபூண் டுக்கவர்சுடு நீறணிந் தொளிமல்குபுனற் காவிரிப் புக்கவர்துயர் கெடுகெனப் பூசுவெண்பொடி மேவிய மிக்கவர்வழி பாடுசெய் விளநகரவர் மேயதே.

846

வாளிசேரடங் கார்மதில் தொலையநூறிய வம்பின்வேய்த் தோளிபாகம் அமர்ந்தவர் உயர்ந்ததொல்கடல் நஞ்சுண்ட காளமல்கிய கண்டத்தர் கதிர்விரிசுடர் முடியினர் மீளியேறுகந் தேறினார் மேயதுவிள நகரதே.

847

கால்விளங்கெரி கழலினார் கையிளங்கிய வேலினார் நூல்விளங்கிய மார்பினார் நோயிலார்பிறப் பும்மிலார் மால்விளங்கொளி மல்கிய மாசிலாமணி மிடறினார் மேல்விளங்குவெண் பிறையினார் மேயதுவிள நகரதே.

848

பன்னினார்மறை பாடினார் பாயசீர்ப்பழங் காவிரித் துன்னுதண்டுறை முன்னினார் தூநெறிபெறு வாரெனச் சென்னிதிங்களைப் பொங்கராக் கங்கையோடுடன் சேர்த்தினார் மின்னுபொன்புரி நூலினார் மேயதுவிள நகரதே.

849

தேவரும்மம ரர்களுந் திசைகள்மேலுள தெய்வமும் யாவரும்மறி யாததோர் அமைதியாற்றழ லுருவினார் மூவரும்மிவ ரென்னவும் முதல்வரும்மிவ ரென்னவும் மேவரும்பொரு ளாயினார் மேயதுவிள நகரதே.

850

சொற்றரும்மறை பாடினார் சுடர்விடுஞ் சடைமுடியினார் கற்றருவ்வடங் கையினார் காவிரித்துறை காட்டினார் மற்றருந்திரள் தோளினார் மாசில்வெண்பொடிப் பூசினார் விற்றரும்மணி மிடறினார் மேயதுவிள நகரதே.

851

படர்தருஞ்சடை முடியினார் பைங்கழல்லடி பரவுவார் அடர்தரும்பிணி கெடுகென அருளுவாரர வரையினார் விடர்தரும்மணி மிடறினார் மின்னுபொன்புரி நூலினார் மிடறரும்படை மழுவினார் மேயதுவிள நகரதே.

852

கையிலங்கிய வேலினார் தோலினார்கரி காலினார் பையிலங்கர வல்குலாள் பாகமாகிய பரமனார் மையிலங்கொளி மல்கிய மாசிலாமணி மிடறினார் மெய்யிலங்குவெண் ணீற்றினார் மேயதுவிள நகரதே.

853

உள்ளதன்றனைக் காண்பன்கீ ழென்றமாமணி வண்ணனும் உள்ளதன்றனைக் காண்பன்மே லென்றமாமலர் அண்ணலும் உள்ளதன்றனைக் கண்டிலார் ஒளியார்தருஞ்சடை முடியின்மேல் உள்ளதன்றனைக் கண்டிலா வொளியார்விளநகர் மேயதே.

854

மென்சிறைவண் டியாழ்முரல் விளநகர்த்துறை மேவிய நன்பிறைநுதல் அண்ணலைச் சண்பைஞானசம் பந்தன்சீர் இன்புறுந்தமி ழாற்சொன்ன ஏத்துவார்வினை நீங்கிப்போய்த் துன்புறுந் துயரம்மிலாத் தூநெறிபெறு வார்களே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - துறைகாட்டும்வள்ளநாதர், தேவியார் - தோழியம்மை.