திருஇரும்பூளை - வினாவுரை பண் - இந்தளம்
இரண்டாம் திருமுறை – திருக்கடைக்காப்பு
2.36 திருஇரும்பூளை - வினாவுரை
திருஞானசம்பந்தர்
சீரார் கழலே தொழுவீ ரிதுசெப்பீர் வாரார் முலைமங்கை யொடும் முடனாகி ஏரா ரிரும்பூளை யிடங்கொண்ட ஈசன் காரார் கடல்நஞ் சமுதுண்ட கருத்தே.
தொழலார் கழலேதொழு தொண்டர்கள் சொல்லீர் குழலார் மொழிக்கோல் வளையோ டுடனாகி எழிலா ரிரும்பூளை யிடங்கொண்ட ஈசன் கழல்தான் கரிகா னிடையாடு கருத்தே.
அன்பா லடிகை தொழுவீ ரறியீரே மின்போல் மருங்குல் மடவா ளொடுமேவி இன்பா யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன் பொன்போற் சடையிற் புனல்வைத்த பொருளே.
நச்சித் தொழுவீர்கள் நமக்கிது சொல்லீர் கச்சிப் பொலிகாமக் கொடியுடன் கூடி இச்சித் திரும்பூளை யிடங்கொண்ட ஈசன் உச்சித் தலையிற் பலிகொண் டுழலூணே.
சுற்றார்ந் தடியே தொழுவீ ரிதுசொல்லீர் நற்றாழ் குழல்நங்கை யொடும் முடனாகி எற்றே யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன் புற்றா டரவோடென்பு பூண்ட பொருளே.
தோடார் மலர்தூய்த் தொழுதொண்டர் கள்சொல்லீர் சேடார் குழற்சே யிழையோ டுடனாகி ஈடா யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன் காடார் கடுவே டுவனான கருத்தே. (*) இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.
ஒருக்கும் மனத்தன்ப ருள்ளீ ரிதுசொல்லீர் பருக்கை மதவேழ முரித்துமை யோடும் இருக்கை யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன் அரக்கன் உரந்தீர்த் தருளாக் கியவாறே.
துயரா யினநீங்கித் தொழுந்தொண்டர் சொல்லீர் கயலார் கருங்கண்ணி யொடும் முடனாகி இயல்பா யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன் முயல்வா ரிருவர்க் கெரியா கியமொய்ம்பே.
துணைநன் மலர்தூய்த் தொழுந்தொண்டர் கள்சொல்லீர் பணைமென் முலைப்பார்ப் பதியோ டுடனாகி இணையில் லிரும்பூளை யிடங்கொண்ட ஈசன் அணைவில் சமண்சாக் கியமாக் கியவாறே.
எந்தை யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன் சந்தம் பயில்சண்பை யுண்ஞான சம்பந்தன் செந்தண் தமிழ்செப் பியபத் திவைவல்லார் பந்தம் மறுத்தோங் குவர்பான் மையினாலே.
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - காசியாரண்ணியேசுவரர், தேவியார் - ஏலவார்குழலம்மை.