திருஆடானை பண் - நட்டராகம்
இரண்டாம் திருமுறை – திருக்கடைக்காப்பு
2.112 திருஆடானை
திருஞானசம்பந்தர்
மாதோர் கூறுகந் தேற தேறிய ஆதியா னுறை ஆடானை போதினாற் புனைந் தேத்து வார்தமை வாதியா வினை மாயுமே.
வாடல் வெண்டலை அங்கை யேந்திநின் றாடலா னுறை ஆடானை தோடுலா மலர் தூவிக் கைதொழ வீடும் நுங்கள் வினைகளே.
மங்கை கூறினன் மான்ம றியுடை அங்கை யானுறை ஆடானை தங்கை யாற்றொழு தேத்த வல்லவர் மங்கு நோய்பிணி மாயுமே.
சுண்ண நீறணி மார்பிற் றோல்புனை அண்ண லானுறை ஆடானை வண்ண மாமலர் தூவிக் கைதொழ எண்ணு வாரிடர் ஏகுமே.
கொய்ய ணிம்மலர்க் கொன்றை சூடிய ஐயன் மேவிய ஆடானை கைய ணிம்மல ரால்வ ணங்கிட வெய்ய வல்வினை வீடுமே.
வானி ளம்மதி மல்கு வார்சடை ஆனஞ் சாடலன் ஆடானை தேன ணிம்மலர் சேர்த்த முன்செய்த ஊன முள்ள வொழியுமே.
துலங்கு வெண்மழு வேந்திச் சூழ்சடை அலங்க லானுறை ஆடானை நலங்கொள் மாமலர் தூவி நாடொறும் வலங்கொள் வார்வினை மாயுமே.
வெந்த நீறணி மார்பிற் றோல்புனை அந்த மில்லவன் ஆடானை கந்த மாமலர் தூவிக் கைதொழுஞ் சிந்தை யார்வினை தேயுமே.
மறைவல் லாரொடு வான வர்தொழு தறையுந் தண்புனல் ஆடானை உறையும் ஈசனை யேத்தத் தீவினை பறையும் நல்வினை பற்றுமே.
மாய னும்மல ரானுங் கைதொழ ஆய அந்தணன் ஆடானை தூய மாமலர் தூவிக் கைதொழ தீய வல்வினை தீருமே.
வீடி னார்மலி வேங்க டத்துநின் றாட லானுறை ஆடானை நாடி ஞானசம் பந்தன் செந்தமிழ் பாட நோய்பிணி பாறுமே.
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - ஆதிரத்தினேசுவரர், தேவியார் - அம்பாயிரவல்லியம்மை.