திருப்பழையனூர்-திரு ஆலங்காடு பண் - தக்கராகம்
முதல் திருமுறை – திருக்கடைக்காப்பு
1.45 திருப்பழையனூர்-திரு ஆலங்காடு
திருஞானசம்பந்தர்
துஞ்ச வருவாருந் தொழுவிப்பாரும் வழுவிப்போய் நெஞ்சம் புகுந்தென்னை நினைவிப்பாரும் முனைநட்பாய் வஞ்சப் படுத்தொருத்தி வாழ்நாள்கொள்ளும் வகைகேட் டஞ்சும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே.
கேடும் பிறவியும் ஆக்கினாருங் கேடிலா வீடு மாநெறி விளம்பினாரெம் விகிர்தனார் காடுஞ் சுடலையும் கைக்கொண்டெல்லிக் கணப்பேயோ டாடும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே.
கந்தங் கமழ்கொன்றைக் கண்ணிசூடி கனலாடி வெந்த பொடிநீற்றை விளங்கப்பூசும் விகிர்தனார் கொந்தண் பொழிற்சோலை யரவின்தோன்றிக் கோடல்பூத் தந்தண் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே.
பால மதிசென்னி படரச்சூடி பழியோராக் கால னுயிர்செற்ற காலனாய கருத்தனார் கோலம் பொழிற்சோலைப் பெடையோடாடி மடமஞ்ஞை ஆலும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே.
ஈர்க்கும் புனல்சூடி இளவெண்டிங்கள் முதிரவே பார்க்கு மரவம்பூண் டாடிவேடம் பயின்றாருங் கார்க்கொள் கொடிமுல்லை குருந்தமேறிக் கருந்தேன்மொய்த் தார்க்கும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே.
பறையுஞ் சிறுகுழலும் யாழும்பூதம் பயிற்றவே மறையும் பலபாடி மயானத்துறையும் மைந்தனார் பிறையும் பெரும்புனல்சேர் சடையினாரும் பேடைவண் டறையும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே.
நுணங்கு மறைபாடி யாடிவேடம் பயின்றாரும் இணங்கு மலைமகளோ டிருகூறொன்றாய் இசைந்தாரும் வணங்குஞ் சிறுத்தொண்டர் வைகலேத்தும் வாழ்த்துங்கேட் டணங்கும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே.
கணையும் வரிசிலையும் எரியுங்கூடிக் கவர்ந்துண்ண இணையில் எயின்மூன்றும் எரித்திட்டாரெம் இறைவனார் பிணையுஞ் சிறுமறியுங் கலையுமெல்லாங் கங்குல்சேர்ந் தணையும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே.
489 கவிழ மலைதரளக் கடகக்கையால் எடுத்தான்றோள் பவழ நுனைவிரலாற் பையவூன்றிப் பரிந்தாரும் தவழுங் கொடிமுல்லை புறவஞ்சேர நறவம்பூத் தவிழும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே.
பகலும் இரவுஞ்சேர் பண்பினாரும் நண்போரா திகலும் இருவர்க்கும் எரியாய்த்தோன்றி நிமிர்ந்தாரும் புகலும் வழிபாடு வல்லார்க்கென்றுந் தீயபோய் அகலும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே.
போழம் பலபேசிப் போதுசாற்றித் திரிவாரும் வேழம் வருமளவும் வெயிலேதுற்றித் திரிவாரும் கேழல் வினைபோகக் கேட்பிப்பாரும் கேடிலா ஆழ்வர் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே.
சாந்தங் கமழ்மறுகிற் சண்பைஞான சம்பந்தன் ஆந்தண் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளை வேந்த னருளாலே விரித்தபாடல் இவைவல்லார் சேர்ந்த விடமெல்லாந் தீர்த்தமாகச் சேர்வாரே.
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - ஊர்த்ததாண்டவேசுரர், தேவியார் - வண்டார்குழலியம்மை.