Skip to content
Periya Puranam

பன்னிரண்டாம் திருமுறை – பெரிய புராணம்

2.03 இயற்பகை நாயனார் புராணம்

சேக்கிழார்

404

சென்னி வெண்குடை நீடு அநபாயன் திருக் குலம் புகழ் பெருக்கிய சிறப்பின் மன்னு தொல் புகழ் மருத நீர் நாட்டு வயல் வளம் தர இயல்பினில் அளித்துப் பொன்னி நல் நதி மிக்க நீர் பாய்ந்து புணரி தன்னையும் புனித மாக்குவதோர் நன்னெடும் பெரும் தீர்த்த முன்னுடைய நலம் சிறந்தது வளம் புகார் நகரம்

405

அக் குலப் பதிக் குடி முதல் வணிகர் அளவில் செல்வத்து வளமையின் அமைந்தார் செக்கர் வெண் பிறைச் சடையவர் அடிமைத் திறத்தின் மிக்கவர் மறைச் சிலம்படியார் மிக்க சீர் அடியார்கள் யார் எனினும் வேண்டும் யாவையும் இல்லை என்னாதே இக் கடல் படி நிகழ முன் கொடுக்கும் இயல்பின் நின்றவர் உலகு இயற் பகையார்

406

ஆறு சூடிய ஐயர் மெய் அடிமை அளவிலாத ஓர் உளம் நிறை அருளால் நீறு சேர் திரு மேனியார் மனத்து நினைத்த யாவையும் வினைப்பட முடித்து மாறு இலாத நன்னெறியினில் விளங்கும் மனை அறம் புரி மகிழ்ச்சியின் வந்த பேறெலாம் அவர் ஏவின செய்யும் பெருமையே எனப் பேணி வாழ் நாளில்

407

ஆயும் நுண் பொருள் ஆகியும் வெளியே அம்பலத்துள் நின்று ஆடுவார் உம்பர் நாயகிக்கும் அஃது அறியவோ பிரியா நங்கைதான் அறியாமையோ அறியோம் தூய நீறு பொன் மேனியில் விளங்கத் தூர்த்த வேடமும் தோன்ற வேதியராய் மாய வண்ணமே கொண்டு தம் தொண்டர் மாறாத வண்ணமும் காட்டுவான் வந்தார்

408

வந்து தண்புகார் வணிகர் தம் மறுகின் மருங்கு இயற் பகையார் மனை புகுந்த எந்தை எம்பிரான் அடியவர் அணைந்தார் என்று நின்றதோர் இன்ப ஆதரவால் சிந்தை அன்பொடு சென்று எதிர் வணங்கிச் சிறப்பின் மிக்க அர்ச்சனைகள் முன் செய்து முந்தை எம் பெரும் தவத்தினாலென்கோ முனிவர் இங்கு எழுந்து அருளியது என்றார்

409

என்று கூறிய இயற்பகையார் முன் எய்தி நின்ற அக் கைதவ மறையோர் கொன்ற வார்சடையார் அடியார்கள் குறித்து வேண்டின குணம் எனக் கொண்டே ஒன்றும் நீர் எதிர் மறாது உவந்து அளிக்கும் உண்மை கேட்டு நும் பாலொன்று வேண்டி இன்று நான் இங்கு வந்தனன் அதனுக்கு இசையலாம் எனில் இயம்பலாம் என்றார்

410

என்ன அவ்வுரை கேட்டு இயற்பகையார் யாதும் ஒன்றும் என் பக்கல் உண்டாகில் அன்னது எம்பிரான் அடியவர் உடைமை ஐயம் இல்லை நீர் அருள் செயும் என்ன மன்னு காதல் உன் மனைவியை வேண்டி வந்தது இங்கு என அங்கணர் எதிரே சொன்ன போதிலும் முன்னையின் மகிழ்ந்து தூய தொண்டனார் தொழுது உரை செய்வார்

411

இது எனக்கு முன்பு உள்ளதே வேண்டி எம் பிரான் செய்த பேறு எனக்கு என்னாக் கதுமெனச் சென்று தம் மனைவாழ் வாழ்க்கை கற்பின் மேம்படு காதலி யாரை விதி மணக் குல மடந்தை இன்றுனை இம் மெய்த் தவர்க்கு நான் கொடுத்தனன் என்ன மது மலர்க் குழலாள் மனைவியார் கலங்கி மனம் தெளிந்த பின் மற்று இது மொழிவார்

412

இன்று நீர் எனக்கு அருள் செய்தது இதுவேல் என உயிர்க்கு ஒரு நாத நீர் உரைத்தது ஒன்றை நான் செயும் அத்தனை அல்லால் உரிமை வேறு உளதோ எனக்கு என்று தன் தனிப்பெருங் கணவரை வணங்கத் தாழ்ந்து தொண்டனார் தாம் எதிர் வணங்க சென்று மாதவன் சேவடி பணிந்து திகைத்து நின்றனள் திருவினும் பெரியாள்

413

மாது தன்னை முன் கொடுத்த மாதவர் தாம் மனம் மகிழ்ந்து பேர் உவகையின் மலர்ந்தே யாது நான் இனிச் செய் பணி என்றே இறைஞ்சி நின்றவர் தம் எதிர் நோக்கி சாதி வேதியர் ஆகிய தலைவர் தையல் தன்னை யான் தனிக் கொடு போகக் காதல் மேவிய சுற்றமும் பதியும் கடக்க நீ துணை போதுக என்றார்

414

என்று அவர் அருளிச் செய்ய யானே முன் செய் குற்றேவல் ஒன்றியது தன்னை என்னை உடையவர் அருளிச் செய்ய நின்றது பிழையாம் என்று நினைந்து வேறு இடத்துப் புக்குப் பொன் திகழ் அறுவை சாத்தி பூங்கச்சுப் பொலிய வீக்கி

415

வாளொடு பலகை ஏந்தி வந்து எதிர் வணங்கி மிக்க ஆளரி ஏறு போல்வார் அவரை முன் போக்கிப் பின்னே தோளிணை துணையே ஆகப் போயினார் துன்னினாரை நீளிடைப் பட முன் கூடி நிலத்திடை வீழ்த்த நேர்வார்

416

மனைவியார் சுற்றத்தாரும் வள்ளலார் சுற்றத்தாரும் இனையது ஒன்றி யாரே செய்தார் இயற்பகை பித்தன் ஆனால் புனை இழை தன்னைக் கொண்டு போவதாம் ஒருவன் என்று துனை பெரும் பழியை மீட்பான் தொடர்வதற்கு எழுந்து சூழ்வார்

417

வேலொடு வில்லும் வாளும் சுரிகையும் எடுத்து மிக்க காலென விசையில் சென்று கடிநகர் புறத்துப் போகிப் பாலிரு மருங்கும் ஈண்டிப் பரந்த ஆர்வம் பொங்க மால் கடல் கிளர்ந்தது என்ன வந்து எதிர் வளைத்துக் கொண்டார்

418

வழி விடும் துணை பின் போத வழித்துணை ஆகி உள்ளார் கழி பெரும் காதல் காட்டிக் காரிகை உடன் போம் போதில் அழிதகன் போகேல் ஈண்டவ் வருங் குலக் கொடியை விட்டுப் பழிவிட நீ போ என்று பகர்ந்து எதிர் நிரந்து வந்தார்

419

. மறை முனி அஞ்சினான் போல் மாதினைப் பார்க்க மாதும் இறைவனே அஞ்ச வேண்டாம் இயற்பகை வெல்லும் என்ன அறை கழல் அண்ணல் கேளா அடியனேன் அவரை எல்லாம் தறை இடைப் படுத்துகின்றேன் தளர்ந்து அருள் செய்யேல் என்று

420

பெரு விறல் ஆளி என்னப் பிறங்கு எரி சிதற நோக்கிப் பரிபவப் பட்டு வந்த படர் பெருஞ் சுற்றத் தாரை ஒருவரும் எதிர் நில்லாமே ஓடிப் போய்ப் பிழையும் அன்றேல் எரி சுடர் வாளில் கூறாய்த் துடிக்கின்றீர் என்று நேர்ந்தார்

421

ஏட! நீ என் செய்தாயால்? இத்திறம் இயம்பு கின்றாய் நாடுறு பழியும் ஒன்னார் நகையையும் நாணாய் இன்று பாடவம் உரைப்பது உன்றன் மனைவியைப் பனவற்கு ஈந்தோ கூடவே மடிவது அன்றிக் கொடுக்க யாம் ஓட்டோ ம் என்றார்

422

மற்றவர் சொன்ன மாற்றம் கேட்டலும் மனத்தின் வந்த செற்ற முன் பொங்க உங்கள் உடல் துணி எங்கும் சிந்தி முற்று நும் உயிரை எல்லாம் முதல் விசும்பு ஏற்றிக் கொண்டு நற்றவர் தம்மைப் போக விடுவேன் என்று எழுந்தார் நல்லோர்

423

நேர்ந்தவர் எதிர்ந்த போது நிறைந்த அச் சுற்றத்தாரும் சார்ந்தவர் தம் முன் செல்லார் தையலைக் கொண்டு பெற்றம் ஊர்ந்தவர் படிமேற் செல்ல உற்று எதிர் உடன்று பொங்கி ஆர்ந்த வெஞ் சினத்தால் மேல் சென்று அடர்ந்து எதிர் தடுத்தார் (அன்றே.

424

சென்று அவர் தடுத்த போதில் இயற்பகையார் முன் சீறி வன்றுணை வாளே யாகச் சாரிகை மாறி வந்து துன்றினர் தோளும் தாளும் தலைகளும் துணித்து வீழ்த்து வென்றடு புலியேறு அன்ன அமர் விளையாட்டில் மிக்கார்

425

மூண்டு முன் பலராய் வந்தார் தனி வந்து முட்டினார்கள் வேண்டிய திசைகள் தோறும் வேறு வேறு அமர் செய் போழ்தில் ஆண்டகை வீரர் தாமே அனைவர்க்கும் அனைவர் ஆகிக் காண்டகு விசையில் பாய்ந்து கலந்து முன் துணித்து வீழ்த்தார்

426

சொரிந்தன குடல்கள் எங்கும் துணிந்தன உடல்கள் எங்கும் விரிந்தன தலைகள் எங்கும் மிடைந்தன கழுகும் எங்கும் எரிந்தன விழிகள் எங்கும் எதிர்ப்பவர் ஒருவர் இன்றித் திரிந்தனர் களனில் எங்கும் சிவன் கழல் புனைந்த வீரர்

427

மாடலை குருதி பொங்க மடிந்த செங் களத்தின் நின்றும் ஆடுறு செயலின் வந்த கிளைஞரோடு அணைந்தார் தம்மில் ஓடினார் உள்ளார் உய்ந்தார் ஒழிந்தவர் ஒழிந்தே மாண்டார் நீடிய வாளும் தாமும் நின்றவர் தாமே நின்றார்

428

திருவுடை மனைவியாரைக் கொடுத்து இடைச் செறுத்து முன்பு வரு பெரும் சுற்றம் எல்லாம் வாளினால் துணித்து மாட்டி அருமறை முனியை நோக்கி அடிகள் நீர் அஞ்சா வண்ணம் பொருவருங் கானம் நீங்க விடுவன் என்று உடனே போந்தார்

429

இருவரால் அறிய ஒண்ணா ஒருவர் பின் செல்லும் ஏழை பொரு திறல் வீரர் பின்பு போக முன் போகும் போதில் அருமறை முனிவன் சாய்க்காடு அதன் மருங்கு அணைய மேவித் திரு மலி தோளினானை மீள் எனச் செப்பினானே

430

தவ முனி தன்னை மீளச் சொன்ன பின் தலையால் ஆர அவன் மலர்ப் பதங்கள் சூடி அஞ்சலி கூப்பி நின்று புவனம் மூன்று உய்ய வந்த பூசுரன் தன்னை ஏத்தி இவன் அருள் பெறப் பெற்றேன் என்று இயற்பகையாரும் மீண்டார்

431

செய்வதற்கு அரிய செய்கை செய்த நல் தொண்டர் போக மை திகழ் கண்டன் எண்தோள் மறையவன் மகிழ்ந்து நோக்கிப் பொய் தரும் உள்ளம் இல்லான் பார்க்கிலன் போனான் என்று மெய் தரு சிந்தையாரை மீளவும் அழைக்கல் உற்றான்

432

இயற்பகை முனிவா ஓலம் ஈண்டு நீ வருவாய் ஓலம் அயர்ப்பு இலாதானே ஓலம் அன்பனே ஓலம் ஓலம் செயற்கருஞ் செய்கை செய்த தீரனே ஓலம் என்றான் மயக்கறு மறை ஓலிட்டு மால் அயன் தேட நின்றான்

433

அழைத்த பேர் ஓசை கேளா அடியனேன் வந்தேன் வந்தேன் பிழைத்தவர் உளரேல் இன்னும் பெருவலி தடக்கை வாளின் இழைத்தவர் ஆகின்றார் என்று இயற்பகையார் வந்து எய்தக் குழைப் பொலி காதினானும் மறைந்தனன் கோலம் கொள்வான்

434

சென்றவர் முனியைக் காணார் சேயிழை தன்னைக் கண்டார் பொன்திகழ் குன்று வெள்ளிப் பொருப்பின் மேல் பொலிந்தது என்ன தன்துணை உடனே வானில் தலைவனை விடை மேல் கண்டார் நின்றிலர் தொழுது வீழ்ந்தார் நிலத்தினின்று எழுந்தார் நேர்ந்தார்

435

சொல்லுவது அறியேன் வாழி தோற்றிய தோற்றம் போற்றி வல்லை வந்து அருளி என்னை வழித்தொண்டு கொண்டாய் போற்றி எல்லையில் இன்ப வெள்ளம் எனக்கு அருள் செய்தாய் போற்றி தில்லை அம்பலத்துள் ஆடும் சேவடி போற்றி என்ன

436

விண்ணிடை நின்ற வெள்ளை விடையவர் அடியார் தம்மை எண்ணிய உலகு தன்னில் இப்படி நம்பால் அன்பு பண்ணிய பரிவு கண்டு மகிழ்ந்தனம் பழுது இலாதாய் நண்ணிய மனைவி யோடு நம்முடன் போதுக என்று

437

திருவளர் சிறப்பின் மிக்க திருத் தொண்டர் தமக்குந் தேற்றம் மருவிய தெய்வக் கற்பின் மனைவியார் தமக்குந் தக்க பெருகிய அருளின் நீடு பேறு அளித்து இமையோர் ஏத்தப் பொரு விடைப் பாகர் மன்னும் பொற் பொது அதனுள் புக்கார்

438

வானவர் பூவின் மாரி பொழிய மா மறைகள் ஆர்ப்ப ஞான மா முனிவர் போற்ற நல மிகு சிவலோகத்தில் ஊனமில் தொண்டர் கும்பிட்டு உடன் உறை பெருமை பெற்றார் ஏனைய சுற்றத்தாரும் வானிடை இன்பம் பெற்றார்

439

இன்புறு தாரம் தன்னை ஈசனுக்கு அன்பர் என்றே துன்புறாது உதவும் தொண்டர் பெருமையைத் தொழுது வாழ்த்தி அன்புறு மனத்தால் நாதன் அடியவர்க்கு அன்பு நீடு மன்புகழ் இளைசை மாறன் வளத்தினை வழுத்தல் உற்றேன்