விரை செய் நறும் பூந் தொடை இதழி வேணியார் தம் கழல் பரவிப் பரசுபெறு மா தவ முனிவன் பரசு ராமன் பெறு நாடு திரை செய் கடலின் பெருவளவனும் திருந்து நிலனின் செழு வளனும் வரையின் வளனும் உடன் பெருகி மல்கு நாடு மலை நாடு
பன்னிரண்டாம் திருமுறை – பெரிய புராணம்
2.06 விறன்மிண்ட நாயனார் புராணம்
சேக்கிழார்
வாரி சொரியும் கதிர் முத்தும் வயல்மென் கரும்பில் படு முத்தும் வேரல் விளையும் குளிர் முத்தும் வேழ மருப்பின் ஒளிர் முத்தும் மூரல் எனச் சொல் வெண் முத்த நகையார் தெரிந்து முறை கோக்கும் சேரர் திரு நாட்டு ஊர்களின் முன் சிறந்த மூதூர் செங்குன்றூர்
என்னும் பெயரின் விளங்கி உலகேறும் பெருமை உடையது தான் அன்னம் பயிலும் வயல் உழவின் அமைந்த வளத்தால் ஆய்ந்த மறை சொன்ன நெறியின் வழி ஒழுகும் தூய குடிமைத் தலை நின்றார் மன்னும் குலத்தின் மா மறை நூல் மரபிற் பெரியோர் வாழ் பதியாம்
அப் பொன் பதியின் இடை வேளாண் குலத்தை விளக்க அவதரித்தார் செப்பற்கு அரிய பெரும் சீர்த்திச் சிவனார் செய்ய கழல் பற்றி எப் பற்றினையும் அற எறிவார் எல்லை தெரிய ஒண்ணாதார் மெய்ப் பத்தர்கள் பால் பரிவுடையார் எம்பிரானார் விறன் மிண்டர்
நதியும் மதியும் புனைந்த சடை நம்பர் விரும்பி நலம் சிறந்த பதிகள் எங்கும் கும்பிட்டுப் படரும் காதல் வழிச் செல்வார் முதிரும் அன்பில் பெரும் தொண்டர் முறைமை நீடு திருக் கூட்டத்து எதிர் முன் பரவும் அருள் பெற்றே இறைவர் பாதம் தொழப் பெற்றார்
பொன் தாழ் அருவி மலைநாடு கடந்து கடல் சூழ் புவி எங்கும் சென்று ஆள் உடையார் அடியவர் தம் திண்மை ஒழுக்க நடை செலுத்தி வன் தாள் மேருச் சிலை வளைத்துப் புரங்கள் செற்ற வைதிகத் தேர் நின்றார் இருந்த திருவாரூர் பணிந்தார் நிகர் ஒன்று இல்லாதார்
திருவார் பெருமை திகழ்கின்ற தேவ ஆசிரியன் இடைப் பொலிந்து மருவா நின்ற சிவனடியார் தம்மைத் தொழுது வந்து அணையாது ஒருவாறு ஒதுங்கும் வன் தொண்டன் புறகென்று உரைப்பச் சிவன் அருளால் பெருகா நின்ற பெரும் பேறு பெற்றார் மற்றும் பெற நின்றார்
சேண் ஆர் மேருச் சிலை வளைத்த சிவனார் அடியார் திருக்கூட்டம் பேணாது ஏகும் ஊரனுக்கும் பிரானாம் தன்மைப் பிறை சூடிப் பூணார் அரவம் புனைந்தார்க்கும் புறகு என்று உரைக்க மற்றவர் பால் கோணா அருளைப் பெற்றார் மற்று இனியார் பெருமை கூறுவார்
ஞாலம் உய்ய நாம் உய்ய நம்பி சைவ நன் னெறியின் சீலம் உய்யத் திருத் தொண்டத் தொகை முன் பாடச் செழு மறைகள் ஓலம் இடவும் உணர்வு அரியார் உடனாம் உளது என்றால் ஆலம் அமுது செய்த பிரான் அடியார் பெருமை அறிந்தாரார்
ஒக்க நெடு நாள் இவ் உலகில் உயர்ந்த சைவப் பெருந் தன்மை தொக்க நிலைமை நெறி போற்றித் தொண்டு பெற்ற விறன் மிண்டர் தக்க வகையால் தம் பெருமான் அருளினாலே தாள் நிழல்ற்கீழ் மிக்க கண நாயகர் ஆகும் தன்மை பெற்று விளங்கினார்
வேறு பிரிதென் திருத் தொண்டத் தொகையால் உலகு விளங்க வரும் பேறு தனக்குக் காரணராம் பிரானார் விறன் மிண்டரின் பெருமை கூறும் அளவு என் அளவிற்றே அவர் தாள் சென்னி மேற் கொண்டே ஆறை வணிகர் அமர் நீதி அன்பர் திருத் தொண்டு அறைகுவாம்